இது குஜராத்தின் 'கொம்பன்..' ஒட்டுமொத்த கிராமத்தை அலறவிடும் ஒற்றை காளை.. மக்கள் போட்ட எஸ்கேப் பிளான்
காந்தி நகர்: மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது
நகரமயமாக்கல் அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு விலங்குகளும் மனிதர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நிகழ்வுகளில் ரயில் உள்ளிட்ட வாகனங்கள் மோதி யானை போன்ற விலங்குகள் உயிரிழக்கும் சோகமான நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது.

குஜராத்
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இதுபோன்ற ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. அங்கும் மனிதர்களுக்கும் மிருகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் விஷயம். ஆனால், அந்த விலங்கின் செயலைக் கண்டு அஞ்சி ஒட்டுமொத்த கிராமமே இரவு நேரத்தில் தங்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன நடந்தது? கிராமத்தையே தூங்க விடாமல் செய்யும் எந்த விலங்கு இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

ஒற்றை காளை
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள பத்ரா பகுதியில் அமைந்துள்ளது டப்கா கிராமம். இங்கு அமைந்துள்ள தாலியா பாதா என்ற பகுதியில் எப்போதும் கடுகடு முகத்துடன் காளை ஒன்று தன்னந்தனியாக சுற்றி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மக்களைத் தூங்கவிடாமல் அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்ரோஷமாக வீடுகளின் சுவர்களை முட்டுவது போன்ற செயல்கள் மூலம் கிராம மக்களை இது தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளது.

மரத்தில் ஏறிய மக்கள்
அவ்வளவு ஏன் சில சமயங்களில் அந்த காளை பொதுமக்களின் வீடுகளுக்குள் சென்றும் கூட தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரத்தில் சரிவரத் தூங்க முடியாத நிலை கூட அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேறு வழியின்றி மரங்களின் மேல் தூங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காளைக்குப் பயந்து, கிராம மக்கள் தங்கள் கட்டில்களை மரங்களின் மீது வைத்து, இரவில் தூங்குகின்றனர்.

என்ன காரணம்
மாஹி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள திலியா பாதா என்ற இந்தப் பகுதியில் காட்டு விலங்குகள் பல காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு புல் உள்ளிட்ட தீவனம் நன்கு கிடைப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் இங்குத் தற்காலிக குடிசைகளை அமைத்துள்ளனர். இதனால் கோபமடைந்துள்ள அந்த காளை தான் கிராம மக்களைத் தூங்க விடாமல் அலறவிட்டு வருகிறது.

குறி வைத்துத் தாக்கும் காளை
இது குறித்து அங்கு வசிக்கும் நிதின் ஜாதவ் என்பவர் கூறுகையில், "கடந்த இரு வாரங்களில் மட்டும் அந்த காளை 3 முதல் 4 நபர்களைத் தாக்கியுள்ளது. அதேநேரம் அந்தக் காளை அனைவரையும் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே தாக்குகிறது. ஒருவேளை அந்தக்காளையை தொந்தரவு செய்பவர்களை மட்டும் அது குறி வைத்துத் தாக்கலாம்" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications