ஒடிசாவின் பொருளாதார முதுகெலும்பாக மாறும் 'பூரி'.. 5டி தலைவர்.. வி.கே.பாண்டியன் நம்பிக்கை
புவனேஸ்வர்: பூரி ஒடிசாவின் பொருளாதார முதுகெலும்பாக மாறும் என 'மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின்' தலைவரான வி.கே. பாண்டியன் கூறியுள்ளார்.
ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன், கடந்த ஆண்டு ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தள கட்சியின் கேபினேட் அமைச்சர் பொறுப்புக்கு இணையான பதவியில், அம்மாநில அரசால் அமர்த்தப்பட்டார். இந்நிலையில், தலாபானியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பூரி ஒடிசாவின் பொருளாதார முதுகெலும்பாக மாறும் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, "பூரியை உலக பாரம்பரிய நகரமாக மாற்றுவதற்கான பணிகளுக்கு சில தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் மீறி இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாற்றத்திற்கான பணிகள் ஜெகநாதர் கோயிலில் இருந்து துவங்கும். பூரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும். தலைநகர் புவனேஸ்வருக்கும் பூரிக்கும் இடையே எட்டு வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவையும் பூரி வரை நீட்டிக்கப்படும்.
பூரி நகரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த பல்வேறு வகைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், வளரச்சிக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் லாபத்திற்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. மக்களின் நலனை காக்கவே முதல்வர் நவீன் பட்நாயக் பாடுபடுகிறார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவே அவர் முயன்று வருகிறார். எனவே எதிர்வரும் தேர்தலில் பிரம்மகிரி மற்றும் பூரி சதார் சட்டமன்றத் தொகுதிகளில் வசிப்பவர்களை தேர்தலில் பிஜேடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்ரீமந்திர் பரிக்கிரமா திட்டத்தைப் பற்றி இங்கு கூறவேண்டியது அவசியமாகும். கடந்த 500 ஆண்டுகளில் செய்ய முடியாததை நம்முடைய முதல்வர் வெறும் 3 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். இந்த திட்டம் ஆபத்தானது என பலரும் எச்சரித்திருந்தனர். ஆனால் வளர்ச்சிக்காக எந்த சவாலையும் முதல்வர் எதிர்கொள்ள தயார்.
பூரியை பொறுத்த அளவில், LAccMI பேருந்து சேவை விரைவில் பூரியில் தொடங்கும். அனைத்து பஞ்சாயத்து தலைமையகங்களிலும் அமா(Ama) வங்கி கிளைகள் திறக்கப்படும். பூரி நகரத்திற்காக அரசு தொடங்கியுள்ள வளர்ச்சி முயற்சிகள் தவிர, மாவட்டத்தின் திட்டங்களுக்காக மாநில அரசு 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications