"மார்க்கர் பென்"னைக் கையில் எடுக்கும் தேர்தல் ஆணையம்.. மை வைக்க!
டெல்லி: வாக்குப் பதிவின்போது வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அடையாள மை முறையில் மாற்றம் கொண்டு வரவுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி இனிமேல் இங்க் வைக்காமல் மார்க்கர் பென் மூலம் அடையாளம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதுவரை பாட்டில்களில் உள்ள மையை பிரஷ்ஷால் எடுத்து விரலில் வைத்து வந்தனர். அதை தூக்கிப் போட்டு விட்டு இனிமேல் ஸ்டைலாக மார்க்கர் பென்னில் அடையாளம் வைப்பார்கள் வாக்குச் சாவடி ஊழியர்கள்.
இந்த மார்க்கர் பென்களை தற்போது சோதித்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்த பேனாவை மைசூர் பெயிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது.

1962 முதல்
கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியத் தேர்தல்களில் இந்த அடையாள மை தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அவர்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்கு அடையாளமாக இந்த அடையாள மை இடப்படுகிறது.

குண்டக்க மண்டக்க மை வைக்கிறாங்க பாஸ்
ஆனால் சமீப காலமாக இந்த மை வைக்கும் முறைக்கு வாக்காளர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. காரணம், மை வைக்கும் ஊழியர்கள் சின்னதாக நீட்டாக வைக்காமல், குண்டக்க மண்டக்க வைத்து விரல் அழகை பாழ்படுத்தி விடுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரஷ் சரியில்லை
மேலும் அவர்கள் வைத்திருக்கும் பிரஷ்ஷும் சரியில்லை. இஷ்டத்திற்கு போட்டுத் தீட்டி விடுகின்றனர் என்றும் வாக்காளர்கள் புலம்புகிறார்கள். இதனால்தான் மார்க்கர் பென் ஐடியாவை தேர்தல் ஆணையம் செயல்படுத்த முனைந்துள்ளது.

பேனா ஈசியாச்சே
அடையாள மை பாட்டில்களையும், பிரஷ்ஷையும் விட மார்க்கர் பென்னை பயன்படுத்துவது எளிது என்பதாலும், இதை இடத்திற்கு இடம் மாற்றிச் செல்வது மிக மிக சுலபம் என்பதாலும் இந்த முறைக்கு தேர்தல் ஆணையம் மாற உத்தேசித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சோதனை
மைசூர் பெயிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த மார்க்கர் பேனாக்கள், சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

வி்ரைவில் முடிவு
இதுகுறித்து தேர்தல் ஆணையத் தரப்பில் கூறுகையில் தற்போது மார்க்கர் பேனாக்களை சோதித்து வருகிறோம். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முடிவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து இதுகுறித்துத் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications