மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு நடுவே சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 71% வாக்குகள் பதிவு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளில் மாலை 5 மணி வரை மொத்தம் 71% வாக்குகள் பதிவாகி இருந்தன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும்.

7 மணி வாக்குப் பதிவு தொகுதிகள்: முதல் கட்ட தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. மோஹ்லா-மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், கொங்கர், கேஷ்கல், கொண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர், கோண்டா ஆகிய 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.
8 மணி வாக்குப் பதிவு தொகுதிகள்: இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பண்டரியா, கவர்தா, கைராகர், டோங்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, ஜக்தல்பூர், சித்ரகூட், பஸ்தார் அல்லது பஸ்தர் ஆகிய 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் இடம் பெற்றிருப்பவை.
வாக்காளர்கள்: சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 40,78,689 பேர் வாக்காளர்கள். இவர்களில் பெண் வாக்காளர்கள் 20,84,675 பேர்; ஆண் வாக்காளர்கள் 19,93,936; 69 பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் 1,64,299 பேர் முதல் முறையாக வாக்களிக்கும் 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள்.
வாக்கு சாவடிகள்: இன்றைய வாக்குப் பதிவுக்காக மொத்தம் 5,304 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 126 வாக்கு சாவடிகள் பழங்குடிகள் கிராமத்தில் அமைக்கப்பட்டன. இந்த 126 கிராமங்களை சேர்ந்த பழங்குடிகளும் நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக வாக்களித்தனர். 2,431 வாக்கு சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது.
இருமுனைப் போட்டி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார்.
மொத்த வேட்பாளர்கள்: சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட தேர்தலில் 223 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 25 பேர் பெண்கள். இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 13 தொகுதிகளில் பழங்குடிகள், தலித் தொகுதிகள். இந்த தொகுதிகளில் 6 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் போட்டியிட்டனர்.ர்.
2018 தேர்தல் நிலவரம்: 2018 சட்டசபை தேர்தலில் தற்போது முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்றது. பாஜக 2 இடங்களிலும் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் 1 இடத்த்லும் வென்றது. அத்தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 இடங்களை (43.9%) கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.
மாஜி முதல்வர் ரமண் சிங்: இன்று தேர்தல் நடைபெறும் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதல்வர் பாஜகவின் ரமண் சிங் போட்டியிட்டார். இத்தொகுதியில் 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் ரமண்சிங்.
மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்: மாவோயிஸ்டுகள் அதிக செல்வாக்கு செலுத்தும் பகுதி என்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தனர். அத்துடன் தேர்தல் அதிகாரிகளையும் பாதுகாப்பு படையினரையும் இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல்களையும் மாவோயிஸ்டுகள் நடத்தினர்.












Click it and Unblock the Notifications