2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 6 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 2-வது கட்டமாக நாளை வடகிழக்கு மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 6 தொகுதிகளில் நடைபெற்றன.
அசாமில் 72% வாக்குகளும், திரிபுராவில் 84% வாக்குகளும் பதிவாகின. வாக்குப் பதிவும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக முடிவடைந்தது.
6 தொகுதிகளில் வாக்குப் பதிவு
இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக நாளை நாகாலாந்து, மணிப்பூரில் தலா 1 தொகுதிகளிலும் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகாலயாவில் தலா 2 தொகுதிகளிலுமாக மொத்தம் 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. நாளை மிசோரம் மாநிலத்தில் நடைபெற இருந்த வாக்குப் பதிவு ஏப்ரல் 11-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அருணாசல் சட்டசபை
மேலும் அருணாசலப் பிரதேச மாநில சட்டசபைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவும் மொத்தம் 49 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.
நாகாலாந்து
நாகாலாந்தில் ஒரே ஒரு தொகுதியில் 3 வேட்பாளர்கள்தான் போட்டியிடுகின்றனர். நாகா மக்கள் முன்னணியின் சார்பில் அம்மாநில முதல்வர் நெய்பியூ ரியோ, காங்கிரஸ் கட்சியின் கேவி பூஷா, இந்திய சோசலிஸ்ட் கட்சியின் அகேயூ அச்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மணிப்பூர்
மணிப்பூர் புறநகர் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியில் 327 வாக்குச் சாவடிகள் அதிகபதற்றமானவை என்றும் 791 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை- 28 மட்டுமே அமைதியானவை என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அருணாசல்
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. நாளைய வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேகாலயா
மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங், துரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பி.ஏ.சங்மா
மேகலாயாவில் என்.பி.பி. கட்சித் தலைவர் பி.ஏ. சங்மாவும் நாளை துரா தொகுதியில் தேர்தலை எதிர்கொள்கிறார். 1977ஆம் ஆண்டு முதல் 2009 வரை இத்தொகுதியில் 7 முறை சங்மா வென்றுள்ளார். 1996ஆம் ஆண்டு காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார்.