உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மரணம்.. கொச்சியில் காலமானார்
கொச்சி: மரண தண்டனையை ஒழிக்க நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இன்று பிற்பகல் கேரள மாநிலம், கொச்சியில் தனது இல்லத்தில் காலமானார்.
அவருக்கு வயது 100. சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த கிருஷ்ணய்யர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
சமீபத்தில்தான் அவரது 100வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
சிறுநீரக கோளாறு, இதயக் கோளாறு மற்றும் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார் கிருஷ்ணய்யர்.
சிறந்த சட்ட நிபுணரான கிருஷ்ணய்யர், இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தவர். இதற்காக வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பேசியும் வந்தவர். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரபாடுவின் அமைச்சரவையில் கேரளாவில் அமைச்சராக இருந்துள்ளார்.
கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். அப்போது பல வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை கூறியவர்.