ஆன்லைனில் அப்பாவி பெண்களை குறி வைத்த ஐஎஸ்ஐஎஸ் என்ஜினியர்
ஜெய்பூர்: அப்பாவி பெண்களிடம் நைசாகப் பேசி அவர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியாவுக்கு அனுப்ப முயன்று வந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த என்ஜினியர் முகமது சிராஜுதீன்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்ஜினியரான முகமது சிராஜுதீன். அவர் ஆன்லைன் மூலம் பலரை கவர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர வைக்க முயற்சி செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி அவர் ஜெய்பூரில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிராஜுதீனின் மனைவியே அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் கூறியதாவது,
நாம் குடும்பத்தோடு சிரியாவுக்கு செல்ல வேண்டும் என என் கணவர் வலியுறுத்தி வந்தார். நான் கர்ப்பமாக இருந்தபோது அவர் எனக்கு போன் செய்து தான் சிரியாவுக்கு செல்ல விரும்புவதாக கூறினார். மேலும் கென்யாவில் இருந்து வந்து ஹைதராபாத்தில் வீட்டு வேலை செய்த ஆமீனா என்ற பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார் என்றார்.
சிராஜுதீன் ஆன்லைனில் பெண்களை தேடி வந்தாராம். அப்பாவியாக இருக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களின் மனதை மாற்றி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருமாறு கூறி வந்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக இருப்பதால் அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பவர்கள் பெண்களை தான் தேர்வு செய்கிறார்கள்.
சிராஜுதீன் நைசாகப் பேசிப் பழகிய பெண்களில் சிலர் சிரியாவுக்கு செல்ல தயாராக இருந்ததில் இருந்து அவரின் தந்திரம் தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications