என்னை யாரும் கட்டாயப்படுத்தலை... கணவருடன் வாழ விடுங்கள்: கேரளா பெண் ஹாதியா கதறல்
என்னை யாரும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை. நான் என் கணவருடன் வாழத்தான் விரும்புகிறேன் என்று கேரளா பெண் ஹாதியா கதறியுள்ளார்.
கொச்சின்: இஸ்லாம் மதத்துக்கு மாறு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஷெபின் ஜஹன் என் கணவர், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று கேரளா பெண் ஹாதியா கூறியுள்ளார்.
லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கி காதலித்து, மதம் மாற்றுவதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஹாதியாவுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கொச்சியில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். செய்தியாளர்களிடம் பேச தடை விதிக்கப்பட்டதால் அவர் சத்தம்போட்டு தனது தரப்பு கருத்தை பதிவு செய்தார்.
அகிலாவின் காதல் திருமணம்
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலாவுக்கும்,24 ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார்.
இந்துப்பெண்கள் காதல்
கேரளாவில் முஸ்லிம் இளைஞர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்துவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன.
மகளை ஏமாற்றிவிட்டனர்
ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
திருமணம் ரத்து
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார்.
ஹாதியாவிடம் விசாரணை
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி உத்தரவிட்டது. ஹாதியாவிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் ஹாதியாவை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் ஆஜர்
இதனையடுத்து கொச்சியில் இருந்து அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.
அகிலா அசோகன் என்ற இளம்பெண் ஹாதியாவாக மாறியது எப்படி என்று அவர் நாளை உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
கணவரோடு வாழ விடுங்கள்
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேச காவல்துறையினர் அனுமதிக்காத காரணத்தால் தனது தரப்பு கருத்தை சத்தமாக பதிவு செய்தார் ஹாதியா. இஸ்லாம் மதத்துக்கு மாறு என்று என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஷெபின் ஜஹன் என் கணவர், அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். நான் முஸ்லிம், எனக்கு நீதி வேண்டும் என்று அவர் சத்தம் போட்டு கத்தினார். உச்சநீதிமன்றம் நாளை என்ன தீர்ப்பளிக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.