டெல்லி உள்பட 22 ஏர்போர்ட்டுகளை தகர்க்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: டெல்லி விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28-ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.

இதையடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எல்லை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி உட்பட 5 விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை தாக்க கூடும் என்ற எச்சரிக்கையால் இந்த மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவற்றில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு கொண்டு வரும் பொருட்களை முழுமையாக பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் விமான நிலையங்களையும் மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. இதனிடையே குளிர்காலம் துவங்குவதற்குள் 100 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications