கேரளாவில் 52 கிலோ எடையுள்ள பலாப்பழம்... கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெற நடவடிக்கை
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் விளைந்த பலாப்பழம் 52 கிலோ எடை உள்ளதால், அதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
வயநாடு மாவட்டம் காப்பாட்டுமலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வினோத்குமார். இவரது தோட்டத்தில் பலாமரம், மலை வாழை உள்ளிட்ட பழ மரங்களை வளர்த்து வருகிறார். தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் தனது தோட்டத்தில் விளைந்த பலாபழங்களை அறுவடை செய்து அதனை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் வினோத் குமார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இவரது தோட்டத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் மிகப்பெரிய அளவில் பலாப்பழம் காய்த்து தொங்கியதை வினோத்குமார் கவனித்துள்ளார். வழக்கத்தை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்ததால் அந்த பலாப்பழத்தை எடை போட்டு பார்த்ததில் அதன் எடை 52 கிலோ எனத் தெரியவந்தது. இதையடுத்து இது குறித்த தகவலை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் வினோத்குமார் தோட்டத்திற்கு வந்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் 52 கிலோ எடைகொண்ட பலாப்பழத்தை பார்த்து அசந்ததுடன், இதனை கின்னர் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்து அதனை அனுப்பி வைத்துள்ளனர். விரைவில் விவசாயி வினோத்குமாரும் அவர் விளைவித்த 52 கிலோ எடையுள்ள பலாப்பழமும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாய்ந்து வந்து காலை கவ்விய சிறுத்தை.. காப்பாற்ற வந்த தெரு நாய்கள்.. ஹைதராபாத்தில் திக் திக்- வீடியோ
இதனிடையே இப்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பலாப்பழத்தின் எடை 42.72 கிலோ மட்டுமே உள்ளது. அந்த எடையையும், சாதனையையும் முறியடிக்கும் வகையில் வினோத்குமாரின் தோட்டத்தில் விளைந்த பலாப்பழம் திகழ்கிறது.