நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்
கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற்கு வங்கத்துக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுக்கடங்காமல் திரியும் கொரோனாவை அடக்குவதற்கான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான்.
இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களுக்கு மத்திய அரசுதான் தடுப்பூசிகளை சப்ளை செய்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தடுப்பூசிகள் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டி வருவதாக டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டி வருகின்றன.

அனைவருக்கும் தடுப்பூசிகள்
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, '' அனைத்து மாநிலங்களுக்கும் சீரான அளவில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. சில மாநிலங்கள் இது தொடர்பாக பயனற்ற அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடையே பீதியை உருவாக்குகின்றன. இவை தவறான நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு'' என்று கூறினார்.

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு இதுவரை 40.31 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 1.92 கோடிக்கும் அதிகமான இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் இன்னும் அவர்களிடமும தனியார் மருத்துவமனைகளிலும் உள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தை விட மேற்கு வங்கத்துக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

14 கோடி டோஸ்கள் தேவை
இது தொடர்பாக மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:- மேற்கு வங்காளத்திற்கு 14 கோடி டோஸ்கள் தேவை, ஆனால் 2.12 கோடி டோஸ்கள் மட்டுமே எங்களுக்கு கிடைத்துள்ளது. மாதத்திற்கு குறைந்தது 2 கோடி டோஸ்கள் மிகவும் அவசியமாகும். இப்படி சப்ளை செய்தாலும் ஏழு கோடி மக்களுக்கு தடுப்பூசி போட ஆறு மாதங்கள் வரை ஆகும்.

எனக்கு பிரச்சனை இல்லை
பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரபிரதேசம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக தடுப்பூசிகளைப் பெறுகிறது. இதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் எங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications