முல்லை பெரியாறு அணையில் சர்வதேச நிபுணர்கள் ஆய்வுக்கு அவசியம் இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: முல்லை பெரியாறு அணையை சர்வதேச நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேரந்த, ரசல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
துணை கண்காணிப்பு குழு இது தொடர்பாக முடிவெடுக்கலாம். அதை இரு மாநிலங்களும் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் தண்ணீர் அளவை 139 அடியாக குறைக்க உத்தரவிட்டது துணை கண்காணிப்பு குழு.
இதன் மூலம், தமிழகம் உச்சநீதிமன்றத்தில் போராடி பெற்ற 142 அடிவரையில் தண்ணீர் தேக்கலாம் என்ற உத்தரவு பொய்த்துப்போகும் சூழல் எழுந்தது.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர். அதேநேரம், சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதன் மூலம் அணை வலுவாக இல்லை என்று வதந்தி பரப்பும் கேரள அரசு மற்றும் அங்குள்ள சிலரின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழு, அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கையளித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications