மல்லையா கடிதம் எழுதியதில் தப்பில்லையே.. பாஜகவுக்கு மன்மோகன்சிங், சிதம்பரம் பதிலடி
டெல்லி: நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய பொருளாதார நிலை குறித்த ஆவணம் வெளியிடப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று வெளியிட்டனர்.

இதன்பிறகு சிதம்பரம் பேசுகையில், வேலை வாய்ப்புகள் எங்கே, புதிய முதலீடுகள் எங்கே என்று இப்புத்தகத்தில் ஆதாரப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாளை பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு ஏதாவது பொய் தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
இந்த அறிக்கை முழுக்க ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டது. ஜி.டி.பி எண்களுக்கு பின்னால் பாஜக ஓடி ஒழிந்து கொள்கிறது. ஆனால் வேலை வாய்ப்புகள் எங்கே போனது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
இதனிடையே, தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2013ம் ஆண்டு, தனது நிறுவனத்திற்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மன்மோகன்சிங், பல்வேறு தொழிலதிபர்களிடமிருந்தும் இதுபோன்ற கோரிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். நான் எனது மனதுக்கு திருப்தியாக இருந்தால், அரசுக்கு அதனால் நஷ்டம் ஏற்படாது என அறிந்தால் மட்டுமே அவற்றுக்கு செவிமடுப்பேன். இது ஒரு சாதாரண கடிதம். எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதுபோன்ற கடிதங்கள் வரத்தான் செய்யும் என்றார்.
சிதம்பரம் கூறுகையில், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், சாலை அமைச்சகம், வணிக அமைச்சங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை மனுக்கள் வருவது சகஜம்தான். அமைச்சர்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. அதிகாரிகள்தான் தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த 3 வருடங்களில் தற்போதைய மத்திய அரசுக்கு இதுபோன்ற எந்த கோரிக்கையும் வரவில்லையா என்று கேட்டுச் சொல்லுங்கள். ஒருவேளை அப்படி கோரிக்கை வரவிட்டால், இந்த அரசு இயந்திரம் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகிவிடும்.
ஏரு லெட்டரை லீக் செய்துவிட்டீர்கள். இதுபோல எத்தனையோ கோரிக்கைகளுடன் கடிதங்கள் வரத்தான் செய்தன. அவற்றை என்ன செய்வார்கள். தினமும் இதுபோல நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். அனைத்திற்கும் பதில் சொல்ல முடியுமா?
விஜய் மல்லையாவுக்கு 2009ல் கடன் கொடுக்கப்பட்டு்ள்ளது. அப்போது நான் நிதி அமைச்சர் இல்லை. மல்லையா எழுதியாக வெளியான கடிதம் 2013ல் எழுதப்பட்டுள்ளது. இதில் கிங்பிஷர் பற்றி கூறவில்லை. கடன் பற்றியும் அதில் கூறவில்லை. ஷேர் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் விடை தேடிவிட்டு பிறகு கேள்வி எழுப்புங்கள். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications