உங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறோம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி!
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜனதாவின் பணம் வேண்டாம் நாங்களே சரிசெய்து கொள்கிறோம் என மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜக தலைவர் அமித்ஷா பேரணி நடத்தினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் வன்முறை வெடித்தது.
இதில் கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருகட்சியை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை உடைப்பு
அப்போது அங்கிருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பாஜகவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக சிலையை உடைத்தது திரிணாமூல் காங்கிரஸ்தான் என கூறியது.

சிலையை நிறுவுவோம்
இந்நிலையில் கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். இதற்கு மமதா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

எங்களிடம் உள்ளது
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மமதா பானர்ஜி பேசுகையில், "கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜனதாவின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது.

சிதைப்பது பாஜக பழக்கம்
சிலைகளை சிதைப்பது பாஜகவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள். பாஜக மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச்செய்து பாஜக வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது," இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications