வங்கதேச பிரச்சனையில் மத்திய அரசு என்ன செய்தாலும் சப்போர்ட் பண்ணுங்க.. திடீரென 'டோனை' மாற்றிய மமதா!
கொல்கத்தா: வங்கதேசத்தில் அசாதாரண பதற்றம் நிலவும் நிலையில் இந்த பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடிய அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர் புரட்சி உச்சகட்டத்தை எட்டியதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்கதேச மக்களுக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பவர்கள். இதனாலேயே பல்வேறு சர்ச்சைகள் உருவெடுப்பதும் வழக்கம். வங்கதேசத்தில் மாணவர் புரட்சி வெடித்த போது, மேற்கு வங்க மாநிலத்தின் எல்லை கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது.. அகதிகளாக வாருங்கள்.. ஐநாவின் சட்ட விதிகள்படியே அகதிகளாக வரும் வங்கதேச மக்களுக்கு உதவுவோம் என மமதா பானர்ஜி அறிவித்தார். மத்திய அரசு தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரு மாநில அரசு இன்னொரு நாட்டு விவகாரத்தில் இப்படி எல்லாம் செயல்படக் கூடாது எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மாணவர் புரட்சி உக்கிரமடைந்தது. இதனால் ராணுவம் தலையிட்டு பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய அறிவுறுத்தியது. இதனால் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு வங்கதேச நாட்டை விட்டே வெளியேறிவிட்டார் ஷேக் ஹசீனா.
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, முதலில் மேற்கு வங்க மாநிலத்தில் தஞ்சமடைவார் என கூறப்பட்டது. பின்னர் திரிபுரா மாநிலம் அகர்தலா சென்றார். அகர்தலாவில் இருந்து டெல்லி வழியாக லண்டன் செல்ல ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ரெஹானாவும் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தகவல்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், வங்க மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம். இது இரு நாடுகளிடையேயான பிரச்சனை. மத்திய அரசு என்ன முடிவு எடுத்து செயல்படுகிறதோ அதன்படியே நாமும் செயல்படுவோம்,. ஆதரவு தருவோம் என தெரிவித்துள்ளார். வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications