முதற்கட்ட தேர்தல்: அசாமில் 72.14%, மேற்குவங்கத்தில் 79.79% வாக்குகள் பதிவு
முதற்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் நிறைவு பெற்றது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14%, மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஜர்கிராம், மேற்கு திட்னாபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்தனர் இதேபோல் அசாம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு விறு, விறுவென நடந்தது. மாலை 6 மணிக்கு பதிவு நிறைவு பெற்றது.
இன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.. அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்தே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு பின்னரே வாக்குச்சாவடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கபட்டார்கள். அசாம் மற்றும் மேற்கு வங்க இரு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான பகுதிகள் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். எனவே இந்த பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மாநில போலீஸாருடன் மத்தியப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அசாம் முதல்வர் சர்வானந்த சோனா வால், மாநில காங்கிரஸ் தலைவர் ரூபன் போரா, அசாம் கனபரிஷத் தலைவர் அதுல் போரா, செயல்தலைவர் கேஷவ் மகந்தா ஆகிய முக்கிய தலைவர்கள் முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். வாக்குப்பதிவு இரு மாநிலங்களிலும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி முறையே 72.14%, மற்றும் 79.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications