அந்த 59 தொகுதிகள்! மம்தா தலையெழுத்து என்னவாகும்? SIRக்கு பின் அனல் பறக்கும் திரிணாமுல் vs பாஜக மோதல்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 152 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த 152 தொகுதிகளில் 59 தொகுதிகளின் முடிவுகளை ஒட்டுமொத்த மேற்கு வங்கமும் உற்றுக் கவனிக்கிறது. இதில் யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே மேற்கு வங்கத்தில் யாருடைய ஆட்சி என்பது முடிவாகும்!
நாளை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அத்தோடு மேற்கு வங்கத்திலும் முதலாம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 152 தொகுதிகளில் நாளை முதற்கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி கூடுதலாக 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

அந்த 59 தொகுதிகள்
அதில் 59 தொகுதிகள் முடிவுகள் என்ன என்பதே மாநிலத்தில் அரியணை ஏறப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் கேம் சேஞ்சராக மாறியுள்ளன. நான்கு மாவட்டங்களில் உள்ள இந்தத் தொகுதிகள் கூர்ந்து கவனிக்கப்படும் தொகுதிகளாக உள்ளன. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் பாஜக (BJP) இடையே நேரடி யுத்தம் நிலவுகிறது.
வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், பீர்பூம் மற்றும் மேற்கு வர்த்தமான் பகுதிகளில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது வலுவான கட்டமைப்பு மற்றும் கடந்த கால சாதனைகளை நம்பிக் களமிறங்கியுள்ளது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், குறிப்பாக நந்திகிராம் தொகுதி, பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கும் மம்மா பானர்ஜிக்கும் இடையிலான ஒரு கௌரவப் போர்க்களமாக மாறியுள்ளது.
கவுரவ போர்
ஏனென்றால் இந்த நந்திகாரம் தொகுதியில் தான் மம்தாவை கடந்த தேர்தலில் சுவேந்து அதிகாரி வீழ்த்தி இருந்தார். இந்த முறை மம்தா இந்த தொகுதியில் நேரடியாகப் போட்டியிடவில்லை. இருப்பினும், சுவேந்து அதிகாரிக்கு மிகவும் நெருக்கமான நபராகக் கருதப்பட்ட பபித்ரா கர் என்பவரை திரிணாமுல் களமிறக்கியுள்ளது. இதனால் அங்குப் போட்டி கடுமையாகவே உள்ளது.
மற்ற மாவட்டங்களைப் போலல்லாமல் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல், பாஜக தவிரக் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்னமும் வலுவாக உள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இங்கு திரிணாமுல் 20 இடங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சுமார் 7.48 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது இந்தத் தேர்தலின் முடிவுகளில் ஒரு பெரிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
கடும் போட்டி
பாகுறா மற்றும் புருலியா மாவட்டங்களில் போட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. 12 தொகுதிகளைக் கொண்ட பாகுறாவில், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளுமே தலா 6 இடங்களில் முன்னிலை வகித்தன. புருலியாவைப் பொறுத்தவரை, 2021ல் பாஜக முன்னிலையில் இருந்தது. ஆனால் 2024ல் (லோக்சபா தேர்தல் வாக்குகள் அடிப்படையில்) திரிணாமுல் 6 இடங்களைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இரு கட்சிகளுமே சுமார் 40 சதவீத வாக்குகளைத் தக்கவைத்துள்ளதால், இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஒரு முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இங்குள்ள 16 தொகுதிகளில் 15ல் பாஜக முன்னிலை பெற்று, 49.1% வாக்குகளை அள்ளியது. இருப்பினும், 2021 சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் 9 இடங்களைப் பிடித்திருந்தது. இரு கட்சிகளுமே சமமான வாக்கு விகிதத்தைக் கொண்டிருப்பதால், நந்திகிராம் உள்ளிட்ட தொகுதிகளில் யார் வெல்வார்கள் என்பது மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெல்லப் போவது யார்
மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மம்தா போராடும் அதேநேரம், வட மாவட்டங்களில் தனது பிடியை உறுதி செய்ய பாஜக துடிக்கிறது. நந்திகிராம் முதல் முர்ஷிதாபாத் வரை நிலவும் இந்த அனல் பறக்கும் போட்டி, முதல் கட்டத் தேர்தலின் போக்கை மட்டுமல்லாது, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.
வங்கத்து மகள் என்ற மம்தா பானர்ஜியின் இமேஜ்ஜை பாஜக காலி செய்யுமா என்பது நாளை பதிவாகும் வாக்குகள் உறுதி செய்யும். இருப்பினும், இந்த முடிவுகளை நாம் மே 4ம் தேதி தான் தெரிய வரும்.














Click it and Unblock the Notifications