மேற்கு வங்க இடைத் தேர்தல்களில் பாஜக 2வது இடத்திற்கு முன்னேற்றம்.. காங்கிரசுக்கு 4வது இடம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நிறைவடைந்த இடைத் தேர்தல்களில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்று 2வது பெரிய கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மற்றும் ஆல்வார் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கர் சட்டசபை தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் உலுபேரியா லோக்சபா தொகுதிக்கும், நவ்பரா சட்டசபை தொகுதிக்கும் கடந்த 29ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இவை அனைத்திலுமே பாஜக தோற்றபோதிலும், மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அந்த கட்சி முன்னேற்றம் கண்டுள்ளது.

காங்கிரசுக்கு 4வது இடம்
உலுபேரியாவில் திரிணாமுல் காங்கிரஸ் 4.74 லட்சம் வாக்குகள் பெற்று மீண்டும் சீட்டை கைப்பற்றியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இது இரு மடங்கு அதிகமாகும். இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு, பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது.

பாஜக அமோக வாக்குகள்
உலுபேரியாவில் பாஜக 2,93,018 வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த லோக்சபா தேர்தலை விட 1,60,000 வாக்குகள் அதிகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,38,792 வாக்குகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த தேர்தலைவிட இது 2,30,000 வாக்குகள் குறைவாகும். பாஜக 23.2 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் 11 சதவீத வாக்குகளைத்தான் பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் 3வது இடம்
நவ்பரா தொகுதியில் திரிணாமுல் காங்கிரசின், சுனில் சிங், 1,01,729 வாக்குகளை பெற்றுள்ளார். 63,018 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். பாஜக 38,711 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 35,497 வாக்குகளையும் பெற்றுள்ளது. பாஜக 8 சதவீத வாக்கு வளர்ச்சியை இத்தொகுதியில் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி
இந்த முன்னேற்றங்களை மனதில் வைத்துக்கொண்டு மேற்கு வங்கத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறி வருகிறது அக்கட்சி. அதேநேரம், ராஜஸ்தானில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அப்படியிருந்தும், தாங்களே வென்றதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications