தமிழக அரசின் கோபுரம் போல மே.வங்க அரசுக்கு தனி முத்திரையை வெளியிட்டார் மமதா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் அம்மாநில அரசுக்காக தனி முத்திரையை வடிவமைத்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அம்மாநில அரசுக்காக தனி முத்திரையை வடிவமைத்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள மாநில அரசுகள் அனைத்தும், தங்களுக்கென பிரத்யேக இலட்சினை அல்லது அரசு முத்திரையை கொண்டுள்ளன. மத்திய அரசு அலுவல்கள் கடந்து, மாநில அரசு அளவிலான அனைத்து அலுவல்களுக்கும், இந்த இலட்சினையை பயன்படுத்துவது வழக்கமாகும்.
இதில், மேற்கு வங்கம் மாநிலத்திற்கு, இதுவரை தனி இலட்சினை இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக, லோகோ வடிவமைக்கும் பணிகளை முதல்வர் மம்தா பானர்ஜி தமது நேரடி மேற்பார்வையில் மேற்கொண்டார்.
தற்போது மேற்கு வங்க அரசுக்காக தனி இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
அவர் கூறுகையில், ''பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநில அரசுகள் அவற்றுக்கென தனி இலட்சினை கொண்டுள்ளன. இவற்றை பின்பற்றி, மேற்கு வங்க அரசுக்கும் தனி இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ மற்ற மாநில அரசுகளைப் போன்று இல்லாமல் , தேசிய சின்னத்தை உள்ளடக்கியதாக இருக்கும்,'' என்று குறிப்பிட்டார்.