இதே இஸ்லாமியர் தலைவர் யாரேனும் பேசியிருந்தால் என்ன செய்திருக்கும் பாஜக?
இந்திய ராணுவத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசிய மோகன் பாகவத் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கும் பாஜக, இதே முஸ்லிம் அமைப்புகள் பேசியிருந்தால் என்ன செய்திருக்கும்.
Recommended Video

டெல்லி: இந்திய ராணுவத்தின் திறமையை குறைத்து மதிப்பிடும் வகையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியிருக்கும் கருத்துகளை இதே இஸ்லாமிய அமைப்பு தலைவர் யாரேனும் பேசியிருந்தால் பாஜக கொதித்தெழுந்திருக்குமே.
பீகார் மாநிலத்தில் முசாஃபர்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில் போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு ஆறு அல்லது ஏழு மாதங்கள் தேவைப்படும். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பானது மூன்றே நாட்களில் போருக்கு ஆட்களை தயார் செய்யும். இதுவே எங்களின் திறமை என்று கூறியுள்ளார்.
இவரது பேச்சு முன்னாள், இன்னாள் ராணுவவீரர்கள், போரில் வீரமரணமடைந்தவர்களை அவமதிக்கும் பேச்சாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

வேடிக்கை பார்க்கிறது
ஆனால் முப்படைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் பாஜகவோ மோகன் பாகவத்தின் கருத்து எதிர்வினையாற்றாமல் வேடிக்கை பார்க்கிறது. சாதாரண விமர்சனங்களை கூட தாங்க முடியாத பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தவர்களை ஆன்டி இந்தியன் என்று கூறுவர்.

பெரிய ராணுவம்
உலகில் உள்ள மிகப் பெரிய ராணுவத்தில் இந்தியாவுக்கு 2-ஆவது இடமாகும். அதுபோல் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க ராணுவம் குறித்து தங்கள் அமைப்பை சேர்ந்த ஒருவர் தவறாக பேசுகிறார் என்றால் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது பாஜக அரசுக்கு அழகா.

என்ன நடக்கும்
இதுபோல் ராணுவத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், வீரமரணமடைந்த வீரர்களை தரகுறைவுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியோ வேறு கட்சிகளோ கருத்து கூறியிருந்தால் இனி வரும் தேர்தல்களில் அவர்கள் கூறிய கருத்துகளை கூறி இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்திருக்கும். ஆனால் மோகன் பாகவத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். இல்லை அவரது கருத்தை பாஜகவும் ஆமோதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் செல்லுங்கள்
எதிர்கட்சிகளை விடுங்கள். ஏன் ராணுவத்தை கேவலப்படுத்தி முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் யாரேனும் கருத்து தெரிவித்திருந்தால் உடனே அவர்கள் மீது தேச துரோக வழக்கு பாயும். இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியிருக்குமா இல்லையா. இதை பார்க்கும் போது தனக்கு வந்தா ரத்தம், எதிராளிக்கு வந்தா தக்காளி சட்னி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications