சிக்னல் கட்டான பின் பைலட் பேசியது என்ன? காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கண்டுபிடிப்பு! முக்கிய திருப்பம்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்த இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும். இந்த விமான விபத்து விசாரணையில் இந்த ரெக்கார்டர் கண்டுபிடிப்பு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஏர் கிராஃப்ட் ஆக்சிடென்ட் இன்வெஸ்டிகேஷன் பீரோ (AAIB) விமானத்தின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதி செய்திருந்தது.

மோடி நேரடியாக விசாரணை
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ராவிடம், கருப்புப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை மிஸ்ரா பார்வையிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனையையும் அவர் பார்வையிட்டார். சர்க்யூட் ஹவுஸில் நடந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மிஸ்ரா தலைமை தாங்கினார். மத்திய, மாநில அரசுகள், ஏஏஐபி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் விசாரணை முயற்சிகள் குறித்து விவாதித்தார்.
விபத்து குறித்து ஏஏஐபி விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதால், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் சர்வதேச நெறிமுறைகளின் கீழ் விசாரணையை நடத்தி வருகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விமான விபத்து: காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கண்டுபிடிப்பு
டாக்டர் மிஸ்ராவிடம் அதிகாரிகள், "விமானத்தின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பது விசாரணை அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும்.
போயிங் 787-8 (AI 171) விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில், பயணி ஒருவர் தவிர மற்ற அனைவரும் பலியானார்கள். மேலும் தரையில் இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேரும் உயிரிழந்தனர். லண்டனுக்குச் சென்ற விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் உள்ள கல்லூரி வளாகத்தில் விழுந்து தீப்பிடித்தது.
பி.ஜே. மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள விபத்து நடந்த இடத்தை மிஸ்ரா ஆய்வு செய்தார். மாநில அரசு, ஏஏஐபி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சம்பவத்தின் தொடர்ச்சியையும், உடனடி மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் விவரித்தனர் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து டிஎன்ஏ மாதிரிகள் சோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார். காயமடைந்தவர்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் மீட்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிக்னல் கட்டான பின் பைலட் பேசியது என்ன?
சிக்னல் கட்டான பின் பைலட் பேசியது என்ன? என்பதை கண்டறிய இந்த ரெக்கார்டர் உதவியாக இருக்கும். அவரின் மே டே அழைப்பிற்கு பின் எதுவும் பேசவில்லை. அதன்பின் அவர் என்ன பேசினார் என்பதை கண்டறிய இந்த ரெக்கார்டர் உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications