"சங்கடம்.."ஆவேசமாக பேசிய ராகுல்! டக்குனு கிளம்பிய மொழிபெயர்ப்பாளர்! குஜராத்திலும் தொடரும் பஞ்சாயத்து
காந்தி நகர்: குஜராத் தேர்தலில் பிரசாரத்தின் போது, மேடையிலேயே ராகுல் காந்திக்கு நடந்த சம்பவம் சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பாஜகவே ஆட்சியில் உள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் குஜராத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வரும் டிச்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

குஜராத்
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த குஜராத் தேர்தலில் பாஜகவால் 99 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளுக்குப் பின் 77 இடங்களில் வென்றது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தியின் தீவிர பிரசாரம். கடந்த 2017ஆம் ஆண்டு ராகுல் காந்தி குஜராத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தீவிரமாகச் சென்று பிரசாரம் செய்தார். இதன் காரணமாகவே காங்கிரஸால் 77 இடங்களில் வெல்ல முடிந்தது. இந்தச் சூழலில் இப்போது மீண்டும் தேர்தல் வந்துள்ளது.

ராகுல் காந்தி
இப்போது குஜராத் முதல்வராக உள்ள பூபேந்திர படேல் மீது ஏற்கனவே மக்கள் அதிருப்தியில் உள்ளதாக காங்கிரஸினர் கூறுகின்றனர். இதனால் இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதி என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாகவே ராகுல் காந்தி இப்போது குஜராத்திற்குப் பிரசாரம் செய்து வருகிறார். இமாச்சல் தேர்தலுக்கு அவர் பிரசாரத்திற்குச் செல்லாத நிலையில், குஜராத்திற்கு அவர் நேரடியாகச் சென்றுள்ளது காங்கிரஸ் இந்தத் தேர்தலை எவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கிறது எனத் தெரிகிறது.

காமெடி
ஆனால், குஜராத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகிகள் இதை எந்தளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொண்டு உள்ளனர் என்பது தெரியவில்லை. அங்கு நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிக் கொண்டே இருக்கும் போது நடந்த சம்பவம் அக்கட்சிக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் பழங்குடியினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பழங்குடியினர் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

கிளம்பிய மொழிபெயர்ப்பாளர்
அப்போது ராகுல் காந்தி இந்தியில் பேசிக் கொண்டு இருக்க. அதை அருகே இருந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். ராகுல் சொல்லச் சொல்ல இவர் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராகுல் பேச அதை அவர் மொழிபெயர்க்கவில்லை. இதனால் ராகுல் குழம்பிப் போக, "நீங்கள் தொடர்ந்த பேசுங்கள். இங்குள்ளவர்களுக்கு இந்தி புரியும். குஜராத்தியில் மொழிபெயர்ப்பு எல்லாம் தேவையில்லை" என்று கூறுகிறார்.

தொடரும் பஞ்சாயத்து
இதையடுத்து ராகுல் காந்தி மக்களைப் பார்த்து, "இந்தி ஓகேவா" என்று கேட்கிறார். அதற்குக் கூடியிருந்த பொதுமக்கள் ஆமாம் என்பது போலக் கரகோஷம் எழுப்பினர். அதன் பின் ராகுல் மொழிபெயர்ப்பாளரை நோக்கி திரும்புவதற்குள் அவர் அங்கிருந்து கிளம்பியேவிட்டார். இதனால் ராகுல் சற்று அதிருப்தி அடைந்தது தெளிவாகவே தெரிந்தது. இதற்குப் பின் ராகுல் காந்தி தொடர்ந்து மக்களிடம் இந்தியிலேயே பேசினார். ராகுல் காந்தி மொழிப்பெயர்ப்பாளர்களால் பல முறை இப்படி காமெடி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அவரது பேச்சை சம்பந்தமே இல்லாமல் மொழிபெயர்ப்பு செய்த சம்பவங்களும் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக நக்கல்
இதற்கிடையில், இந்த சம்பவத்தால் காங்கிரஸை பாஜக நக்கலடித்து உள்ளது. பாஜகவின் ஐடி பிரிவு பொறுப்பாளர் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, "குஜராத்தில் காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும் என அசோக் கெலாட் சொல்கிறார். அதை உண்மையா என பார்க்க ராகுல் காந்தியே இங்கு வருகிறார். ஆனால், நிஜத்தில் அவர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர் கூட கேட்கத் தயாராக இல்லை" என்று நக்கலடித்து உள்ளார்.

ராகுல் பேச்சு
குஜராத் பிரசாரத்தில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "உங்களைப் புகழ்வதாக 'வனவாசி' என்பார்கள். ஆனால், நீங்கள் தான் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்பதை அவர்கள் சொல்ல மாட்டார்கள். முதல் உரிமையாளர்களான நீங்கள் ஏன் இன்னும் காட்டில் வாழ வேண்டும். அவர்கள் சொல்வது புரிகிறதா? அதாவது நீங்கள் நகரங்களில் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை.. உங்கள் பிள்ளைகள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் வருவதையும், ஆங்கிலம் பேசுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று பாஜகவைத் தாக்கி பேசினார்.

குஜராத் தேர்தல்
அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகக் குஜராத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஒரு புறம் பிரதமர் நரேந்திர மோடி உட்பட மூத்த தலைவர்கள் குஜராத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் காங்கிரஸ் அடுத்தடுத்து மெகா கூட்டங்களை நடத்தி கடைசி நேரப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. இடையில் பஞ்சாப் வெற்றியால் உத்வேகம் அடைந்துள்ள ஆம் ஆத்மியும் குஜராத்தில் தங்கள் கணக்கைத் தொடங்க தயாராகி வருகிறது. இதன் மூலம் குஜராத்தில் இந்த முறை மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் யாருக்குப் பாதகமாக அமையும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications