காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 35ஏ என்றால் என்ன? சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஏன்?
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு அரசியல் சாசனப்படி செல்லாது என அறிவிக்க கோரி அரசு சாரா அமைப்பு ஏன் வழக்கு தொடர்ந்தது? சட்டப்பிரிவு 35ஏ என்பது என்ன?
அதுகுறித்து ஒரு சுறுக்கமான பார்வை இதோ:
35ஏ என்பது, ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கும் ஒரு பிரிவு ஆகும். இவர்களுக்கான சிறப்பு உரிமைகளையும் இந்த சட்டப்பிரிவு வழங்குகிறது. 1954ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் இது அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவில் சேர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன் இந்த சட்ட நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்த சட்டம் என்பது பொதுவாக நிரந்தர குடியுரிமை சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெறுவதையும் இது தடுக்கிறது. காஷ்மீரிலுள்ள, அசையும் சொத்துக்களை பிற மாநிலத்தவர்கள் வாங்க முடியாது. அரசு வேலைவாய்ப்பையும் பெற முடியாது ஸ்காலர்ஷிப் மற்றும் உதவிகளையும் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் பெற முடியாது.
காஷ்மீர் பெண்கள் பிற மாநில ஆண்களை மணமுடித்தால் அந்த பெண்களின் சிறப்பு உரிமைகள் பறி போய்விடும் என்ற அம்சம் சட்டத்தில் உள்ளது. ஆயினும் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட பிரிவு 35ஏ செல்லத்தக்கது அல்ல என்று அரசு சாரா அமைப்பான வி தி சிட்டிசன்ஸ் என்ற அமைப்பு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 368ன் கீழ் திருத்தம் செய்யப்படாமல் இந்த சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதால் இது சட்டப்படி செல்லாது என்பது மனுவின் அம்சம். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமலே இந்த சிறப்பு உரிமைகள் சட்ட பிரிவு என்பது அமலுக்கு வந்துள்ளது என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரைச் சேர்ந்த இரு பெண்கள் வழக்கு தாக்கல் செய்தனர். தங்கள் வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைப்பதில் 35ஏ பிரிவு சிக்கலை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாண்டு மே 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் வாதிட்டனர். அரசு தரப்பு இதில் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல், விவாதம் தேவை என்ற அளவில் வாதத்தை முன் வைத்தது. மனுதாரர் தரப்போ, இந்த சட்டப்பிரிவை நீக்க கோரியது. இந்த வழக்கு, பின்னர் ஆகஸ்ட் 5ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் ஒரு நீதிபதி விடுப்பில் சென்றிருப்பதால் விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் என்று விசாரணைக்கு வந்தது. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலையொட்டி வழக்கு விசாரணை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications