ஜாமீனில் வெளியே வந்த பிறகு ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியாது?
டெல்லி: உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாவது:
தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் மட்டுமே பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்வராகவோ முடியாது.

அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது.
அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும்.
தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும்.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களுக்காகவோ அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும்.
கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.












Click it and Unblock the Notifications