Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்குள் கடல்வழியே நுழைந்தது அல்கொய்தாவின் கடற்படைப் பிரிவு தீவிரவாதிகள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் கடற்பரப்பில் வெடிபொருட்களுடன் தகர்க்கப்பட்ட பாகிஸ்தான் மீன்பிடிப் படகில் இருந்தவர்கள் அல்கொய்தாவின் கடற்படைப் பிரிவு தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக உளவுத்துறை தெரிவித்திருக்கும் தகவல்களின் தொகுப்பு:

தேசிய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமானது டிசம்பர் 31-ந் தேதியன்று சந்தேகத்துக்குரிய தகவல் தொடர்புகளை இடைமறித்துக் கேட்டபோது, கராச்சியின் கேத்தி பந்தரில் இருந்து நாசவேலைகளை நிகழ்த்துவதற்காக தீவிரவாதிகள் படகு இந்தியாவுக்குள் நுழைய இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

When al qaeda almost took over a frigate

இந்திய போர்க்கப்பல்களைத் தகர்ப்பது அல்லது இந்தியாவுக்குள் ஆயுதங்களை போட்டுச் செல்வது என்பது இந்த சதித் திட்டத்தின் நோக்கமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

உடனடியாக இந்தத் தகவல் கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த படகைத் தேடும் பணியில் டோர்னியர் விமானம் முழு வீச்சில் இறங்கியது.

முற்பகல் 11 மணிக்குத் இந்த தேடுதல் நடவடிக்கை தொடங்கியது. பின் சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் கடற்பரப்பில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த மர்ம மீன்பிடிப் படகின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் பகல் 1 மணி மற்றும் மாலை 5.30 மணியளவில் டோர்னியர் விமானம் அந்த மீன்பிடிப் படகை கண்காணித்த போது இந்திய கடற்பகுதிக்குள் அது முன்னேறிக் கொண்டிருந்தது.

பின்னர் மர்ம மீன்பிடிப் படகை மடக்க இந்திய கடலோரக் காவல்படை விரைந்தது. அப்போது படகின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 1 மணியளவில் மர்ம மீன்பிடிப் படகை கடலோரக் காவல்படை நெருங்க அது வேகமாக பாகிஸ்தான் கடற்பகுதியை நோக்கி செலுத்தப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை, கடுமையான இருட்டு காரணமாக அந்தப் படகால் அதிவேகமாக செல்ல முடியவில்லை. அப்போது மீன்பிடிப் படகில் இருந்தவர்களை எச்சரித்தபடியும் துப்பாக்கியால் சுட்டபடியும் கடலோரக் காவல்படையினர் நிற்குமாறு கூறினர்.

இருப்பினும் அந்த படகு நிற்காமல் தொடர்ந்து பாகிஸ்தான் கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணியளவில் படகில் இருந்த 4 பேரில் ஒருவன் படகின் கீழ் தளத்துக்குச் சென்று தீ வைத்தான்.

அப்போது மிகப் பெரிய வெடிசப்தத்துடன் படகு வெடித்தது. இதனால் அந்த கடற்பகுதியில் பெரும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கடலோரக் காவல்படையினர் படகை சென்றடைந்த போது அது முற்றிலும் எரிந்து மூழ்கிக் கொண்டிருந்தது.

இந்த சம்பவம் குஜராத்தின் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து 365 கி.மீ தொலைவில் அதாவது 197 நாட்டிகல் மைல் தொலைவில் நிகழ்ந்தது. அதாவது இந்திய கடல்பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த மர்மப் படகு நுழைந்திருக்கிறது. படகு மிகப் பெரிய வெடிசப்தத்துடன் வெடித்ததால் அதில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என்று உறுதியானது.

நோக்கம் என்ன?

2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் கடல்வழியே ஊடுவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோன்ற ஒரு தாக்குதலை குஜராத்தில் நடத்தும் நோக்கத்துடன் இந்த படகில் தீவிரவாதிகள் வந்தனரா? அல்லது 1993 ஆம் ஆண்டு இதே குஜராத் போர்பந்தர் துறைமுகத்தில் பாகிஸ்தான் இருந்து மீன்பிடிப் படகில் வந்த மர்ம நபர்கள் வெடிபொருட்களைப் போட்டுவிட்டுச் சென்றனர். அந்த வெடிபொருட்கள்தான் 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டது.

அதுபோன்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்துவதற்கான வெடிபொருட்களை கொண்டு வந்து குஜராத் கடற்பகுதியில் போடுவதற்காக வந்தனரா? என பாதுகாப்புப் படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 13-ந் தேதியன்றுதான் 1993 ஆம் ஆண்டு போர்பந்தர் கடற்கரையில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் போட்ட வழக்கில் தேடப்படுகிற யூனுஸ் என்ற லோடாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை குஜராத் போலீஸ் வெளியிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

தென்னிந்திய துறைமுகங்களுக்கும் குறி?

இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்துத் துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல்வழியே ஊடுருவி தென்னிந்திய துறைமுகங்களைத் தாக்கக் கூடும் என்பதால் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஆனால் இந்திய உளவுத்துறையினரோ, பாகிஸ்தானின் ஆதரவு இல்லாமல் எப்படி அந்நாட்டின் கடற்பகுதியில் இருந்து வெடிபொருட்களுடன் ஒரு மீன்பிடிப் படகு இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது மீன்பிடிப் படகு வெடித்த கடற்பரப்பானது சர்வதேச ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் அதிகம் நடைபெறும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அல்கொய்தா இயக்கத்தின் கடற்படை பிரிவு?

இந்த மீன்பிடிப் படகை செலுத்தி வந்தது அல்கொய்தா இயக்கத்தின் கடற்படை பிரிவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்துக்கான அல்கொய்தா (AQIS)தான் இந்தியா அல்லது அமெரிக்கா கப்பல்களைத் தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தது.

இந்த அமைப்பு கடந்த செப்டம்பரில் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவ நினைவு நாளின்போது கராச்சி துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதை கடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டின் கடற்படை கப்பலை தாக்க முயற்சித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அல்கொய்தாவை சேர்ந்த மூன்று பேரை கொன்றதுடன் 7 பேரை கைது செய்தனர்.

தற்போது 2வது முறையாக இந்தியாவுக்குள் கடல்வழியே நுழைந்து தாக்குதல் நடத்த அல்கொய்தா கடற்படை தீவிரவாதிகள் முயற்சித்திருக்கின்றனர். இதுவும் முறியடிக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தாவின் இந்தக் கடற்படைப் பிரிவில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் கடற்படையினரே அதிகம் உள்ளனர். அவர்களில் ஓவைசிஸ் கான் என்பவர் மிக முக்கியமானவர். பாகிஸ்தான் கடற்படை மற்றும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன்தான் இந்த கடற்படைப் பிரிவு முழு வீச்சில் இயங்கி வருகிறது.

இந்தியாவில் கடல்வழியே நாசவேலைகளை நிகழ்த்த முயற்சித்த அல்கொய்தா கடற்படையினர் சதியை முறையான, நேர்த்தியான ஒத்துழைப்புகளால் இந்தியப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்திருப்பது பாகிஸ்தானை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+