நானும் புத்தகம் எழுதுவேன்.. அப்போது உண்மை வெளியே வரும்: நட்வர் சர்ச்சை பற்றி சோனியா
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் கிளப்பியிருக்கும் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, தாமும் ஒரு புத்தகம் எழுதுவேன்; அதில் உண்மைகள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தை நாளை வெளியிட இருக்கிறார். அதில், 2004ஆம் அண்டு சோனியா பிரதமர் பதவி ஏற்பதை 'படுகொலை' அச்சத்தால் ராகுல் காந்தி தடுத்தார் என்று கூறியிருக்கிறார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நட்வர்சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சோனியா காந்தி கூறியுள்ளதாவது:
என்னுடைய கணவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். என்னுடைய மாமியார் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். இந்த துயரை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறேன் நான்.
என்னிடம் நீங்கள் (நட்வர்சிங் புத்தகத்தால்) காயப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? நானும் என்னுடைய சுய சரிதையை எழுத இருக்கிறேன். அதன் பிறகு எல்லா உண்மைகளும் வெளிவரும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.