"இப்படியா நடந்துக்குவாங்க?.. நீங்களும் இப்படியா நடந்துக்குவீங்க?": அத்வானி- ராகுல் சந்தித்தபோது!
டெல்லி: லோக்சபாவில் நேற்று நடந்த கலாட்டாவுக்குப் பின்னர் பாஜக மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்துப் பேசியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. அப்போது இருவரும் மதக் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பாஜக அரசும், சபாநாயகரும் அனுமதிக்காமல் பிடிவாதம் பிடிப்பது குறித்து ராகுல் காந்தி வருத்தப்பட்டு அத்வானியிடம் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
லோக்சபாவில் நேற்று நாடு முழுவதும் நடந்துள்ள மதக் கலவரங்கள், மோதல்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கவில்லை, நிராகரித்தார்.
இதனால் கோபமடைந்த ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத வகையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து கோபமாக பேசினார். சபாநாயகர் பாரபட்சமாக நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்களும் அவையின் மையப்பகுதியில் குழுமி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த திடீர் திருப்பத்தால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி கோபப்பட்டதுதான் நேற்று தலைப்புச் செய்தியாக மாறிப் போனது.

அத்வானியுடன் சந்திப்பு
இந்த மோதலுக்குப் பின்னர் கூட்டம் முடிந்த பின்னர் ராகுல் காந்தி, மூத்த பாஜக தலைவர் அத்வானியைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

அத்வானியிடம் வருத்தம்
அத்வானியைச் சந்தித்த ராகுல் காந்தி சபாநாயகர் போக்கு குறித்துக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்தாராம்.

இப்படியா பிடிவாதம் பிடிப்பது
மதக் கலவரங்கள் உ.பி. மற்றும் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்த முக்கியமான பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாது. அதை ஏன் அரசு அனுமதிக்க மறுக்கிறது. சபாநாயகர் ஏன் பாரபட்சமாக நடக்கிறார், பிடிவாதம் பிடிக்கிறார் என்று வருத்தத்துடன் கேட்டாராம் ராகுல் காந்தி.

முக்கியமானதுதான் - அத்வானி
ராகுல் காந்தியின் ஆதங்கம் கலந்த கருத்துக்களை அமைதியாக கேட்டுக் கொண்டாராம் அத்வானி. பின்னர் அவர் ராகுலிடம், நிச்சயம் மத வன்முறை என்பது முக்கியமான பிரச்சினைதான். அதை நான் மறுக்க மாட்டேன். கவலைக்குரிய ஒன்றுதான்.

எதிர்க்கட்சிகள் இப்படி நடக்கலாமா
அதேசமயம், அவையில் எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதமும் ரசிக்கும்படி இல்லை. இது சரியா என்று ராகுலிடம் அத்வானி கேட்டாராம்.

விவாதத்திற்கு அனுமதி
தற்போது மதக் கலவரம் தொடர்பான விவாதத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதித்துள்ளார். அதில் கலந்து கொண்டு ராகுல் காந்தி எப்படிப் பேசப் போகிறார் என்று தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications