பல்லே, பல்லே: பஞ்சாபி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, ஹர்சிம்ரத்
பதின்டா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் நடனம் ஆடியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்தில் இருக்கும் தஷ்மேஷ் பெண்கள் கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகள் பஞ்சாப் மாநில நாட்டுப்புற பாடல்களை மேடையில் பாடி ஆடினர். அப்போது ஸ்மிருதியும், ஹர்சிம்ரத் கவுரும் மேடைக்கு வந்து கைகளை கோர்த்துக் கொண்டு ஆடினர். பின்னர் ஸ்மிருதி வெட்கப்பட்டுக் கொண்டு சென்றுவிட்டார்.
ஹர்சிம்ரத் கவுர் ஒரு சில ஸ்டெப்ஸ் போட்டார். மத்திய அமைச்சர்கள் இருவர் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. அந்த கல்லூரி விழாவில் பஞ்சாப் மாநில முதல்வர் பர்காஷ் சிங் பாதலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் ஸ்மிருதியும், ஹர்சிம்ரத்தும் பேசிப் பார்த்தவர்களுக்கு அவர்கள் சேர்ந்து நடனம் ஆடியது வியப்பை அளித்துள்ளது.