எங்கே இருக்கிறார் நீரவ் மோடி... அமெரிக்காவிடம் உதவி கேட்கும் சிபிஐ
நீரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க அரசின் உதவியை சிபிஐ நாடி இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க அரசின் உதவியை சிபிஐ நாடி இருக்கிறது. இதுகுறித்து முறையான கடிதம் சிபிஐ மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இவர் எங்கே இருக்கிறார் என்ற குழப்பம் தற்போது நிலவி வருகிறது.

சுவிட்சர்லாந்து
இந்தியாவில் இருந்து அதிகமாக கறுப்புப்பணம் பதுக்கப்படும் இடம் சுவிட்சர்லாந்து ஆகும். இதனால் நீரவ் மோடி சுவிட்சர்லாந்து சென்று இருக்கிறார் என்று கூறப்பட்டது. அங்கு அவருக்கு நெருங்கிய உறவினர்கள் இருப்பதால் அவர் அங்கே இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

சொகுசு ஹோட்டல்
ஆனால் அவர் அங்கே இல்லை என்று வீடியோ ஆதாரம் ஒன்று வெளியானது. அவர் அமெரிக்காவில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. ஜெ.டபிள்யு மேரியாட் எக்செக்ஸ் ஹவுஸ் என்ற ஸ்டார் ஹோட்டலின் 36வது மாடியில் தங்கியிருப்பதாக கூறப்பட்டது. அங்கு ஒருநாள் வாடகை ரூ.75 ஆயிரம் ஆகும்.

அமெரிக்காவிடம் உதவி
அவர் மொத்தம் 90 நாட்கள் அங்கு இருப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே அவர் ரூ.67.5 லட்சத்தை கொடுத்துள்ளார். இதனால் இவரை பிடிக்க அமெரிக்காவிடம் இந்தியா உதவி கேட்க முடிவு செய்து இருக்கிறது.

விரைவில் பிடிபடுவார்
தற்போது இதுகுறித்து அந்நாட்டு அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. அதில் ஏற்படும் முன்னேற்றத்தை வைத்து இதில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதில் சில நடைமுறைகளை பின்பற்ற காலதாமதம் ஆகும் என்பதால் அவரை பிடிக்கவும் நேரம் ஆகும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications