கேம் சேஞ்சராகும் தனித் தொகுதிகள்.. முடிவே மாறும்! குஜராத் தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய இடங்கள்
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள தனித் தொகுதிகளில் யாருடைய ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்கிற கேள்வி எழுந்து வருகிறது.
மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 40 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இவ்வாறு இருக்கையில் 2022 தேர்தலில் இந்த தொகுதிகளை கைப்பற்றும் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
மாநிலத்தில் உள்ள ஒட்டு மொத்த தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டம் டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டம் 5ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
2014 தேர்தல் பிரச்சார தொனியிலேயே பேசும் மோடி.. நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குஜராத்தில் பேச்சு
குஜராத் களம்
இந்நிலையில் தாங்கள்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென பாஜக கடுமையாக உழைத்து வருகிறது . ஏனெனில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் 2025ம் ஆண்டு நூற்றாண்டை எட்டுகிறது. எனவே இதனை சிறப்பாக கொண்டாட பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும். அதற்கு எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிப்பதற்கு முதலில் குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இதுதான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகும்.
தனி தொகுதியின் பலம்
இவ்வாறு இருக்கையில், குஜராத்தில் 40 தனித் தொகுதிகளில் கோலோச்சுபவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைத்துவிடும். குஜராத்தில் வெற்றிபெற 92 தொகுதிகளை கைப்பற்றினால் போதுமானதாகும். அதேவேளையில் இந்த 40 தொகுதிகள் என்பது வெற்றி வாய்ப்பில் ஏறத்தாழ சரிபாதியாகும். எனவே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் இடத்தில் இந்த தொகுதிகள் இருக்கின்றன. தற்போது மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த 40 தொகுதிகளையும் யார் கைப்பற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
வரலாறு என்ன சொல்கிறது?
கடந்த காலத்தில் எந்த கட்சியும் 40களிலும் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தவில்லை. காங்கிரஸ்-பாஜக என இருகட்சிகளுக்கும் சரிசமான இடங்களே கிடைத்திருக்கின்றன. 2017 தேர்தலில் 16 இடங்களில் பாஜகவும், 2 இடங்களில் பாரதிய பழங்குடியினர் கட்சியும், 22 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. 2012 தேர்தலை பொறுத்த அளவில் பாஜக 20 இடங்களையும், காங்கிரஸ் 19 இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறை இதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நடவடிக்கைகள் இந்த தொகுதியின் வாக்கு வங்கியில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கூடுதல் கவனம்
எனவே பாஜக இம்முறை தனித் தொகுதிகளில் தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்காக பல புதிய திட்டங்களையும் தேர்தலில் அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கடந்த காலத்தில் தனித் தொகுதிகளில் பாஜகவை விட அதிகம் வாக்குகளை பெற்றிருப்பதால் இம்முறை பாஜகவை முற்றிலும் வீழ்த்த திட்டமிட்டிருக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி தற்போது மூன்றாவது ஆளாக களம் இறங்கியுள்ளதால் தனித் தொகுதிகளில் வாக்கு வங்கி சிதறடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.