89 தொகுதி யாருக்கு? பாயும் பாஜக.. விடாத காங்கிரஸ்-ஆம்ஆத்மி..குஜராத் முதற்கட்ட தேர்தல் நிலவரம் என்ன?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1ம் தேதி 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது பற்றிய களநிலவரம் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
50,000 பேருடன் மெகாபிளான்.. மார்க்கெட்டிங் மாணவர்களை விடலையே! குஜராத் பாஜகவின் பிரசார வியூகம்..ஆஹா
பாஜக தீவிரம்
மாநிலத்தில் 27 ஆண்டுகளாக அரியனையில் பாஜக உள்ளது. இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக்கொண்டி களப்பணி ஆற்றி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதும், அவர்களுக்கான செல்வாக்கு டாப்பில் இருப்பதும் பாஜகவுக்கு சாதமாக பார்க்கப்படுகிறது. இதனை தான் பல்வேறு கருத்து கணிப்புகளும் உறுதி செய்துள்ளன. அந்த கருத்து கணிப்புகளின் படி பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்-ஆம்ஆத்மி ஆர்வம்
இருப்பினும் கருத்து கணிப்பை புறம்தள்ளிவிட்டு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசும், டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் பெற்ற வெற்றியை தொடர்ந்து புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய ஆம்ஆத்மி கட்சி தலைவர்களும் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, உயர்ந்து வரும் விலைவாசி, பாஜகவின் தொடர் ஆட்சியால் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவை தங்களுக்கு தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜகவை தோற்கடித்து குஜராத்தில் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியின் சூளுரைத்து வருகின்றனர்.
அனல் பறக்கும் பிரசாரம்
இதனால் குஜராத்தில் மூன்று கட்சியினரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்நிலையில் தான் முதற்கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளில் யாருடைய கை ஓங்கி இருக்கும் என்பது பற்றியும், அங்கு இருந்த முந்தைய கால களநிலவரம் என்ன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பாஜகவின் கோட்டையா?
முந்தைய சட்டசபை தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் அடிப்படையில் பார்த்தால் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் பாஜகவின் கை ஓங்கி உள்ளது. இந்த 89 தொகுதிகளில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 49 சதவீத ஓட்டுக்களை அறுவடை செய்து 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டுக்கள் பெற்று 38 தொகுதிகளில் வாகை சூடிய நிலையில் 3 இடங்களை பிற கட்சிகள் கைப்பற்றின. கடந்த 2012 தேர்தலில் இந்த 89 தொகுதிகளில் பாஜக 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் வென்ற நிலையில் கடந்த சட்டசபை தேர்தல் களம் மாறி தாமரைக்கு பின்னடைவை ஏற்படுத்தி கை சின்னத்துக்கு கைக்கைக்கொடுத்தது. இருப்பினும் கூட காங்கிரஸை ஒப்பிடும்போது இந்த 89 தொகுதிகளில் பாஜகவின் கை தான் ஓங்கி உள்ளது.
பாஜக-காங்கிரசுக்கு எவ்வளவு?
முந்தைய தேர்தல் நிலவரங்கள் இப்படி இருந்தாலும் கூட இந்த 89 தொகுதிகளில் பாஜகவின் கோட்டை என 43 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக 17 தொகுதிகளும் இருப்பதாக கூறலாம். இந்த தொகுதிகளில் தொடர்ந்து அக்கட்சியினரே வெற்றி பெற்று வருகின்றனர். இருப்பினும் கூட 29 சட்டசபை தொகுதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களும், பிற கட்சியினரும் மாறிமாறி வெற்றி பெற்று வருகின்றனர்.
எங்கு பாஜக ஆதிக்கம்?
குறிப்பாக சொல்லப்போனால் பாஜகவின் கோட்டையாக உள்ள 43 தொகுதிகளில் முதன்மையானதாக ராஜ்கோட் மேற்கு சட்டசபை தொகுதி உள்ளது. இது பாரதிய ஜனசங்கம், பாஜகவின் கோட்டையாக கடந்த 1960 முதல் இருந்து வருகிறது. கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த சட்டசபை தொகுதியில் மட்டும் 76 சதவீத ஓட்டுக்கள் பாஜகவுக்கு கிடைத்தது. இதேபோல் ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த வல்சாத் தொகுதியை பாஜக 1990ல் கைப்பற்றியது. அதன்பிறகு இந்த தொகுதியில் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த சட்டசபை தொகதியில் பாஜகவுக்கு 79 சதவீத வாக்குகள் பதிவாகின.
எங்கு காங்கிரஸ் ஆதிக்கம்?
காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் கோட்டையாக உள்ளன. குறிப்பாக அம்ரேலி சட்டசபை தொகுதி மிகப்பெரிய கோட்டையாக உள்ளது. கடந்த 4 சட்டசபை தேர்தலில் 3 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரேஷ் தனானி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த தொகுதி தான் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது. மேலும் தற்போதைய 89 தொகுதிகளில் சவுராஷ்டிரா மண்டலத்தில் உள்ள தொகுதிகள் உள்ளன. இதில் கிராமங்கள் நிறைந்த சவுராஷ்டிரா பிராந்திரத்தில் உள்ள தொகுதிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாறாக சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள நகர்புற தொகுதிகளில் பாஜக வாகை சூடி வருகிறது.
பழங்குடியின மக்கள் வாக்குகள்
மேலும் முதற்கட்ட தேர்தலில் பழங்குடியின மக்களின் வாக்குகள் அதிகம் உள்ள சில தொகுதிகள் உள்ளன. குஜராத்தின் டாங், நவ்சாரி, நர்மதா, தபி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கும் நிலையில் இவர்களின் ஓட்டுக்கள் யாருக்கு செல்லும் என்பது இந்த தேர்தலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆம்ஆத்மி தாக்கம் எப்படி?
இருப்பினும் முந்தைய களநிலவரங்கள் இப்படி இருந்தாலும் கூட நாம் ஒன்றை கவனிக்க வேண்டி உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே தான் போட்டியிட்டன. தற்போது ஆம்ஆத்மியும் 181 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது. இதனால் அந்த கட்சியும் ஓட்டுக்களை பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் ஓட்டுக்கள் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைக்கலாம். இதனால் இந்த தேர்தலில் களநிலவரம் மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்த 89 தொகுதிகள் உள்பட மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளிலும் எந்த கட்சி வெற்றியை பதிவு செய்யும் என்பதை அறிய முடிவுகள் வெளியாகும் டிசம்பர் 8 ம் தேதி வரைநாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும்.