நீண்ட நிர்வாக அனுபவம்.. காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் முதல் துணை நிலை ஆளுநர்கள் பின்னணி!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் லெப்டினன்ட்-கவர்னராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன. அக்டோபர் 31 ம் தேதி முதல், காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குடியரசு தலைவர், அவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை நியமித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் சந்திரா 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும். கிரிஷ் சந்திரா முர்மு தற்போது நிதி அமைச்சகத்தில் செலவீனச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அவரின் முதன்மை செயலாளராக பதவி வகித்தவர், கிரிஷ் சந்திரா. குஜராத்தில் முக்கிய நிர்வாக பதவிகள் பலவற்றை வகித்தவர். எனவே, பிரதமரின் நெருங்கிய நம்பிக்கையாளராகக் கருதப்படுகிறார்.
இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) மற்றும் இந்திய காவல்துறை சேவை (ஐ.பி.எஸ்), மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் (ஏ.சி.பி) போன்ற அகில இந்திய சேவைகள் துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில்தான் இருக்குமே தவிர காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரசின் கீழ் அத்துறைகள் வராது.
ராதா கிருஷ்ணா மாத்தூர் திரிபுரா மாநில 1977 ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரி ஆவார். ராதா கிருஷ்ணா மாத்தூர், நாட்டின் தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) பணியாற்றி, 2018 நவம்பரில் ஓய்வு பெற்றார்.
ராதா கிருஷ்ணா மாத்தூர் இந்திய பாதுகாப்பு, மத்திய, சிறு மற்றும் நடுத்தர நிறுவன செயலாளராகவும், திரிபுராவின் தலைமை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஜவுளி அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையராகவும், மத்திய அரசில் ஜவுளி அமைச்சகத்தின் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மத்திய அரசைத் தவிர, ஐ.ஏ.எஸ் அதிகாரி திரிபுரா அரசாங்கங்களுக்கு திரிபுராவின் தலைமைச் செயலாளராகவும், நிதி முதன்மை செயலாளராகவும், வேளாண் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ராதாகிருஷ்ணா மாத்தூர் 2003 டிசம்பரில் திரிபுராவின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக (சி.ஐ.சி) அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. வரும் 31ம் தேதி 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகும் நாளிலேயே, துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஆளுநராக பதவி வகித்த சத்யபால் மாலிக், கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.