Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் இந்த புரொபசர்? உத்தர்காசி சுரங்க மீட்பு பணியில் ஆலோசனை வழங்கும் அர்னால்டு டிக்ஸ்! அதில் கில்லி!

Subscribe to Oneindia Tamil

உத்தர்காசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவர்களை 13 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்க முடியாத நிலையில், சுரங்கப்பாதை எக்ஸ்பர்ட்டான அர்னால்டு டிக்ஸ், மீட்பு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார். யார் இந்த புரொபசர் அர்னால்டு டிக்ஸ்?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா - பார்கோட் இடைய 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. உள்ளே தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த இடத்தில் பாதிப்பு ஏற்படாத போதும், நுழைவு வாயிலில் பாறைகள் சரிந்து மூடியதால் 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். ஜார்கண்ட், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கியது போல 200 மீட்டர் இடைவெளியில் சிக்கிக் கொண்டனர்.

Who is Professor Arnold Dix, underground expert aiding Uttarkashi tunnel rescue operation?

சுரங்கப்பாதை விபத்து: இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இருந்த 6 அங்குல பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கியை அனுப்பி அவர்கள் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, உடனடியாக, குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்க ரம்மி, லூடோ, செஸ் அட்டைகளை குழாய் வழியாக அனுப்பியுள்ளனர். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என நினைத்தனர். ஆனால், மீட்புப் பணியில் ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. இதனால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

புரொபசர் அர்னால்டு டிக்ஸ்: அப்படி வந்திருப்பவர் தான் புரொபசர் அர்னால்டு டிக்ஸ். புகழ்பெற்ற 'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸில், ராயல் மிண்ட் ஆஃப் ஸ்பெயில் கொள்ளையடித்து, சுரங்கப்பாதை வழியாக வெளியே கொண்டு செல்வார் புரொபசர். சுரங்கப்பாதை எக்ஸ்பர்ட்டான அர்னால்டு டிக்ஸ், மீட்புப் பணிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் காப்பாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அர்னால்டு டிக்ஸ் வந்த பிறகு தான், மீட்பு பணிகள் துரிதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் பள்ளிக் கல்வி முடித்து, ஆஸ்திரேலியாவில் புவிசார் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவியல் கல்வி படித்த அர்னால்டு டிக்ஸ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்க கட்டுமான துறையில் கோலோச்சி வருகிறார். தற்போது அர்னால்ட் டிக்ஸ் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் தலைவராக இருக்கிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு சுரங்கப் பாதை திட்டங்களுக்கு இவர் ஆலோசகராக இருந்துள்ளார்.

யார் இந்த அர்னால்டு டிக்ஸ்?: சுரங்ககப்பாதை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையின் எக்ஸ்பெர்ட்டாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் அர்னால்டு டிக்ஸ். சுரங்கப்பாதை துறையில் சிறந்து விளங்குவதற்காக 2011 ஆலன் நெய்லாண்ட் ஆஸ்ட்ரேலேசியன் டன்னலிங் சொசைட்டியின் விருதைப் பெற்றவர் அர்னால்டு டிக்ஸ். சுரங்கப்பாதைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் அர்னால்டு கில்லி. இதற்காக 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தேசிய தீ பாதுகாப்பு சங்கத்தால் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

சுரங்கப்பாதை பணிகளில் நிலவும் சிக்கலான பிரச்சனைகளை சமாளிப்பதில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் அர்னால்டு. தொழில்நுட்ப அபாயங்கள், சுரங்கப்பாதை அமைப்பதில் உள்ள புவியியல் ரீதியிலான பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கக் கூடியவர். அர்னால்ட் டிக்ஸ், ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் பாரிஸ்டராகப் பதிவுசெய்யப்பட்ட சட்ட நிபுணர் என்பது கூடுதல் சிறப்பு.

மிகப்பெரிய சவால்: டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட போது அர்னால்டு டிக்ஸ் டெல்லிக்கு நேரடியாக வந்து ஆலோசனைகளை வழங்கினார். ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு சுரங்கப்பாதை விபத்து மீட்புப் பணிகளுக்கு அவர் தலைமையேற்று இருக்கிறார். தற்போது உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியின் முக்கிய ஆலோசகராக அர்னால்டு டிக்ஸ் செயல்பட்டு வருகிறார்.

அர்னால்டு டிக்ஸ் வந்த பிறகு, உத்தர்காசி சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. உத்தர்காசி சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்டெடுக்க பல்வேறு புதிய யுத்திகள் பற்றி ஆலோசனைகளை வழங்கி வருகிறார் அர்னால்டு டிக்ஸ். 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் நலமாக இருக்கும் வீடியோ வெளியாகி, அவர்களின் உறவினர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது. எனினும், மீட்புப் பணியில் இன்னும் சவால் நீடித்து வருகிறது. மீட்புக் குழுவினர் கிடைமட்டமாக ஆகர் இயந்திரத்தை கொண்டு துளையிட்டு உள்ளே நகர்ந்து கொண்டிருந்தனர். இதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

பணியில் தாமதம்: இந்நிலையில் ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கிரீட் தளம் திடீரென சேதமடைந்தது. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னதாக ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு ராடு குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. சுரங்க இடிபாடுகளில் அதிக அளவு இரும்பு கம்பிகள் இருப்பதால் எந்திரம் மூலம் சுரங்கத்தில் துளையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுரங்க இடிபாடுகளில் உள்ள இரும்பு கம்பிகளை வெட்டி எடுக்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்க இடிபாடுகளில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றினால் மட்டுமே துளையிடும் பிரமாண்ட எந்திரம் மூலம் மீண்டும் மீட்புப்பணிகளை தொடர முடியும். அதேவேளை, சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மலையில் இருந்து செங்குத்தாக துளை அமைத்து தொழிலாளர்களை மீட்கலாமா? என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக மலைப்பகுதிக்கு துளையிடும் எந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நிச்சயம் பாதுகாப்பாக மீட்போம்: மீட்கப்படும் தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மீட்புப் பணிகள் குறித்துப் பேசிய அர்னால்டு டிக்ஸ், "தொழிலாளர்களை மீட்பதற்கான பாதையில் தற்சமயம் நாம் கதவின் அருகில் இருக்கிறோம், அதை தட்டவும் போகிறோம். கதவின் அந்தப் பக்கம் நமது தோழர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்போம். அவர்கள் 41 பேரும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+