காந்தி குடும்பத்தை.. ஜஸ்ட் லைக் தட் உதறித் தள்ளிய சிந்தியா.. சிதைந்து போன 40 ஆண்டு உறவு!
போபால்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள ம.பி.யை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவை பற்றித்தான் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.
ஆங்கில ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியே மொத்தமாக கரைந்துவிட்டது என்கிற தொணியில் நேற்று முதல் பிரேக்கிங் செய்திகளை அளித்து பரபரப்பு தீயை அணையாமல் பார்த்துக்கொள்கின்றன.
அரச குடும்பத்தை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பு, நட்பு, பிரச்சனைகள் என்ன என்பன பற்றியெல்லாம் இப்போது பார்க்கலாம்.
நிறுவனர்
இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளாரே ஜோதிராதித்யா சிந்தியா, அவரது பாட்டி விஜயராஜே சிந்தியா ஜனசங்கத்தை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்த ஜனசங்கம் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு முன்னோடி கட்சியாக இருப்பதாகும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்தில் திமுகவுக்கு முன்னோடி கட்சியாக தி.க. இருப்பது போல், பாஜகவுக்கு முன்னோடி கட்சி என்றால் அது ஜனசங்கம் தான். அதன் கொள்கைகளையும், சித்தாந்தகளையும் இன்றும் பாஜக பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
திசை மாற்றம்
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா 1971-ம் ஆண்டு ஜனசங்கத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அவர் இனைந்தார். ராஜீவ்காந்தியின் நட்பு வட்டத்தில் முக்கியமான இடத்தில் இருந்த மாதவராவ் சிந்தியா, அவரின் நம்பிக்கைகுரிய நபராக விளங்கினார். குவாலியர் அரச பரம்பரையை சேர்ந்தவராக இருந்தாலும் கூட மாதவராவ் சிந்தியா ஒரு போதும் அதன் பெருமையை வெளிக்காட்டி கொண்டதில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார் மாதவராவ் சிந்தியா.
வரலாறு இல்லை
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து வெற்றி பெற்று 9 முறை எம்.பி.யாக இருந்தார் மாதவராவ் சிந்தியா. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததாக மாதவராவ் சிந்தியாவுக்கு வரலாறு இல்லை. மரணத்தை தழுவும் வரை வெற்றி வெற்றி வெற்றி தான். அதுவும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எதிர் போட்டியாளரை துவம்சம் செய்துவிடுவார். ஆனால் அவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியாவோ குணா தொகுதியில் இப்போது மத்திய அமைச்சராக உள்ள நரேந்திர சிங் தோமரிடம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அவரின் செல்வாக்குமின்மையை காட்டுகிறது.
1996-ம் ஆண்டு
இப்போது ராகுலும் ஜோதிராதித்யாவும் எப்படி நட்புடன் இருந்தார்களோ, அப்படித்தான் அப்போது மாதவ்ராவும், ராஜீவும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் அப்படியிருந்தும் ராஜீவ் மறைவுக்கு பிறகு 1996-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து மாதவராவ் சிந்தியா விலகி சிறிது காலம் தனி அரசியல் கட்சியை நடத்தினார். பின்னர் மனக்கசப்பை மறந்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். இப்போது ஏறத்தாழ அதே வரலாறு திரும்பியுள்ளது. தந்தை வழியில் மகன் காங்கிரஸில் இருந்து விலகியிருக்கிறார். என்ன ஒரு வேறுபாடு என்றால் மாதவராவ் தனிக்கட்சி தொடங்கினார். ஜோதிராதித்யா பாஜகவில் ஐக்கியமாகவுள்ளார்.
17 ஆண்டுகாலம்
கடந்த 2001-ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மாதவராவ் சிந்தியா உயிரிழந்த நிலையில், அவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியா அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். தனது தந்தை மறைவு காரணமாக மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2002-ம் ஆண்டு போட்டியிட்டு முதல் வெற்றியை சுவைத்தார் ஜோதிராதித்யா சிந்தியா. 2002 முதல் 2019 வரை சுமார் 17 ஆண்டுகாலம் எம்.பி.யாகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் இந்த ஜோதிராதித்யா.
ஏமாற்றம்
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், தன்னை முதல்வராக தலைமை முன்னிறுத்தும் என எண்ணினார். ஆனால் நீண்ட நெடிய பஞ்சாயத்து, சமாதானம், உறுதிமொழிகளுக்கு பிறகு கமல்நாத்துக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போதே பெரியளவில் அப்செட்டான ஜோதிராதித்யா சிந்தியா லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார். காரணம் அங்கு அவரது மகன் படித்து வந்ததால் அங்கேயே சில மாதங்கள் தங்கிவிட்டார். இதனிடையே 2019 மக்களவைத் தேர்தலில் 40 ஆண்டுகளாக தானும், தனது தந்தையும் கையில் வைத்திருந்த குணா தொகுதியை கோட்டை விட்டார் இந்த சிந்தியா.
புறக்கணிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த தலைவராக ஜோதிராதித்யா சிந்தியா வருவார் என ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதைப் பற்றி ராகுல் அலட்டிக்கொண்டது போல் தெரியவில்லை. மேலும், குறைந்தபட்சம் ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் இந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி நிலைக்கு சென்ற அவர் கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார்.
ஆச்சரியம்
மேலும், விவசாய கடன் விவகாரத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என சில வாரங்களுக்கு முன் ஜோதிராதித்யா சிந்தியா சீண்டிப் பார்த்தார். ஆனால் அப்போது கட்சித் தலைமை அழைத்து அவரை சமாதானம் செய்யவில்லை, சந்திக்கவும் இல்லை. காரணம் அவரிடம் இருந்த பொறுமையின்மையே. இதனால் அவர் பாஜகவுக்கு செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்கின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.