என்னாது, ஜெயலலிதா ஏ.சி. அறையில் இருக்கிறாரா?: சிறை துறை டி.ஐ.ஜி.
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏ.சி. அறையில் ஒன்றும் இல்லை என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் ஏ.சி., தொலைக்காட்சி என சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறுகையில்,
சிறை விதிகளின்படி எந்த அறையிலும் ஏ.சி. வசதி செய்து கொடுக்க முடியாது. அப்படி இருக்கையில் ஜெயலலிதாவின் அறையில் மட்டும் எப்படி ஏ.சி. வைக்க முடியும். அவர் ஏ.சி. உள்ள அறையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இது போன்ற தவறான தகவலை யாரும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.