ஜெ. பெங்களூரில் இருப்பதை விரும்பாத கர்நாடக அரசு... பவானிசிங் பல்டிக்கு இதுவும் ஒரு காரணம்!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக சிறையில் தொடர்ந்து இருப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை. அவர் இருக்கும் வரை இரு மாநிலங்களுக்கு இடையே தேவையில்லாத பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர்ந்தே அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை அந்த மாநில அரசு பல்டி அடிக்க வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பெங்களூரில் பெரும் பதட்டமாகவே இருந்தது. பெங்களூர் சிறைக்குப் படையெடுத்து வந்த அதிமுகவினரை சமாளிக்க முடியாமல் கர்நாடக போலீஸார் திணறினர். மேலும் பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் எழுந்தது.

அதை விட முக்கியமாக சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா மீது தூசு விழுந்தாலும் கூட அது விரும்பத்தகாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.
இதை விட முக்கியமாக கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவை கைதை வைத்து கன்னடர்கள் சிலர் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் கேலி கிண்டல்களில் இறங்கினர். பதிலுக்கு கன்னடர்களை மிரட்டும் வகையில் தமிழகத்தில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்ட செயல்களில் இறங்கினர்.
இதனால் ஜெயலலிதா விவகாரத்தை வைத்து இரு மாநில மக்களிடையே பெரும் கலவரம் வெடித்து விடுமோ என்ற சூழல் ஏற்பட்டது. இது இரு மாநிலங்களிலும் வாழும் தமிழர் மற்றும் கன்னடர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது.
மேலும் கர்நாடக சிறையில் ஜெயலலிதா தொடர வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவும் மாநில அரசை வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையாவும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் இன்று காலை ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் பிற்பகலில் அந்த நிலையை மாற்றிக் கொண்டார். இதற்கு கர்நாடக அரசின் தலையீடே காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவை தொடர்ந்து கர்நாடகத்தில் வைத்துக் கொள்ள விரும்பாமல் பவானி சிங்கிடம் இறங்கிப் போகுமாறு கர்நாடக அரசே கூறியிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications