மோடியை அத்தனை பேச்சு பேசிய சந்திரபாபு நாயுடு.. நண்பேன்டாவாக மாற்ற முயற்சிக்கும் பாஜக-அதே கணக்குதான்!
விசாகப்பட்டினம்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். அதேநேரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த சந்திரபாபு நாயுடுவை அமித்ஷா ஏற்றுக் கொண்டது எதற்காக என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நிகழ்கின்றன.
"மனைவியை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்பவர் மோடி; குருநாதர் அத்வானியையே ஓரம்கட்டியவர்; மோடிக்கு குடும்ப உறவுகள் பற்றி எதுவும் தெரியாது"
"மோடியைவிட அரசியலில் நாங்கள் எல்லாம் சீனியர்கள்"
"ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு எதிராக போராட்டம்"

-இப்படி எல்லாம் பல உக்கிர முகங்களைக் காட்டியவர்தான் ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. இத்தனைக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தென்னிந்தியாவின் முக்கிய கூட்டணி கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி இருந்து வந்தது. தெலுங்கானா மாநில பிரிவினைக்குப் பின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய பாஜக அரசிடம் போராடிப் பார்த்தார் நாயுடு. ஆனால் பாஜகவோ நாயுடுவை கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன நாயுடு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
வெளியேறிய நாயுடு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பாஜகவை மிகக் கடுமையாகவே சாடினார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தார். பிரதமர் மோடியும் சந்திரபாபு நாயுடுவின் வாரிசு அரசியல் விவகாரத்தை கையில் எடுத்து விளாசினார். ஒரு கட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையக் கூடிய சாத்தியத்தையும் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வைத்திருந்தார்.
தேர்தல் களம்: தெலுங்கானா சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது; ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படியான பின்னணியில்தான் டெல்லியில் திடீரென அமித்ஷா- சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புகளை முன்வைத்து பல்வேறு யூகங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சியுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பாஜக தலைவர்களோ அவசரப்பட வேண்டாம்; எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தொண்டர்களிடம் கூறி வருகின்றனர்.
பாஜக கணக்கு இதுதான்: பாஜகவைப் பொறுத்தவரையில் தெலுங்கானாவில் அதிகபட்சம் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் பெற முடியும்; ஆந்திராவில் பூஜ்ஜியத்தில் இருந்து ஏதேனும் ஒன்றிரண்டு முன்னேற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறதா? என போராடிப் பார்க்க வேண்டும். இதுதான் 2 மாநிலங்களின் பாஜகவுக்கான களநிலவரம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவண் கல்யாணின் ஜனசேனாவுடன் இணைந்தால் நிச்சயம் சிங்கிள் டிஜிட் சீட்டுகளை பாஜக வெல்ல முடியும். அதேபோல தெலுங்கானாவில் முதல்வர் கேசிஆருக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை சந்திரபாபு நாயுடு துணையுடன் அறுவடை செய்து 5 சீட்டுகளையாவது பெறலாம் என்பதுதான் பாஜகவின் கணக்கு. எதுவுமே கிடைக்காமல் இருக்கும் நிலையில் ஏதோ கிடைத்தாலே போதும் என்கிற மனநிலையில் இருக்கும் பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடுவை விட்டால் வேறு கதியும் இல்லை; அதனால் அவரை கெட்டியாகவே பிடித்து தக்க வைத்து கொள்ளும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications