பிரம்மாஸ்திரம் இருக்க கவலை எதுக்கு! ஜார்கண்ட் தேர்தல்.. ஜேஎம்எம்- காங். நம்பிக்கைக்கு என்ன காரணம்?
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ள ஓய்வூதிய திட்டங்கள் நிச்சயம் தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஓய்வூதிய திட்டங்களால் யார் பலன் பெறுவார்கள். இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி நடந்து வருகிறது. அங்கு மொத்தம் 81 இடங்கள் உள்ள நிலையில் இரண்டு கட்டங்களாக அங்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.
சோரன் அரசு: இதற்கிடையே ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அங்கு அமல்படுத்தியுள்ள ஓய்வூதியத் திட்டம் தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இது சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் இந்த ஓய்வூதிய திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் என்றும் காங்கிரஸ் பாராட்டித் தள்ளி இருக்கிறது. காங்கிரஸ் இந்தளவுக்குப் பாராட்டும் அந்த ஓய்வூதிய திட்டம் எப்படிச் செயல்படும். இதனால் யாருக்கு லாபம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த திட்டத்தின்படி முதியோர் ஓய்வூதியத் திட்டம், பழங்குடியினக் குழு ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், எச்ஐவி எய்ட்ஸ் நோயாளி ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஐந்து ஓய்வூதிய திட்டங்களில் ஜார்கண்ட் அரசு மாதம் ரூ.1,000 தொகையை வழங்குகிறது.
என்ன ஸ்பெஷல்: தமிழ்நாடு தொடங்கிப் பல மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்கள் இருக்கிறதே இதில் என்ன சிறப்பு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மிக குறைவான நபர்களுக்கே இந்த ஓய்வூதியம் செல்கிறது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில் மக்கள் தொகை 4 கோடியாக இருக்கும் நிலையில், அதில் சுமார் 10% பேருக்கு.. அதாவது 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பல்வேறு வழிகளில் இந்த ரூ 1,000 ஓய்வூதியம் கிடைக்கிறது.
ஜார்க்கண்டில் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சுமார் 12.43 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை ஓய்வூதியம் வழங்குகிறது. இதை ஜார்கண்ட் அரசு ரூ. 1000ஆக உயர்த்தி இருக்கிறது. அதாவது மத்திய அரசு தரும் தொகையைத் தவிர்த்து மீதி தொகையை ஹேமந்த் சோரன் அரசே வழங்குகிறது.
சிரமம் இருக்காது: மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் கூடுதலாக 27.57 லட்சம் பேரை சோரன் அரசு இந்த ஓய்வூதிய திட்டங்களில் சேர்த்துள்ளது. ஒரு வேலை மத்திய அரசு நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் இதனால் பயனாளர்கள் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக ரூ.100 கோடி சுழல் நிதியையும் உருவாக்கியுள்ளது.
அதேநேரம் ஆதாரில் தகவல்கள் தவறாக இருப்பது, ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் இன்னுமே சிரமம் இருக்கிறதாம். இருப்பினும், மக்கள்தொகை 10% பேருக்கு இதன் மூலம் பலன் கிடைப்பதால் நிச்சயம் இது தேர்தலில் கேம் சேஞ்சராக இருக்கும் என்றே காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications