சசிகலா புஷ்பாவை ஆதரித்த குலாம்நபி ஆசாத்துக்கு ராஜ்யசபாவில் 'நன்றி' சொன்ன அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் சொன்னபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த குலாம்நபி ஆசாத்துக்கு அதிமுகவின் மற்றொரு எம்.பி. நவநீதகிருஷ்ணன் திடீரென ராஜ்யசபாவில் நன்றி தெரிவித்தது ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ராஜ்யசபாவில் பற்றி எரியும் காஷ்மீர் குறித்து விவாதம் நடைபெற்றது. காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடக்கும் வன்முறையில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6,000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.

ஒரு துயரம் தோய்ந்த சம்பவம் தொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மிக ஜாலியாக, பாட்டுப்பாடியபடியே எதை எதையோ பேசி அதை காஷ்மீருடன் முடிச்சு போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் திடீரென காங்கிரஸ் தலைவர்களை ஆஹோ ஓஹோவென பாராட்டத் தொடங்கிவிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரான கரண்சிங்கை பாராட்டிய கையோடு திடீரென எதிர்க்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத்தையும் பாராட்டினார்.
ஆனால் அவர் பாராட்டியது காஷ்மீரிகள் என்பதற்காக அல்லவாம்..... "அம்மா பிரச்சனையில் இருந்த போது உதவிய குலாம்நபி ஆசாத், கரண்சிங்குக்கு இந்த தருணத்தில் நன்றி" என்றார் நவநீதகிருஷ்ணன். இது சபையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிமுக எம்பி ஒருவர் காங்கிரஸ் மூத்த தலைவரை புகழ்ந்ததுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணமல்ல... கடந்த வாரம் இதே ராஜ்யசபாவில் கண்ணீரும் கம்பலையுமாக சசிகலா புஷ்பா எம்.பி, என்னை ஜெயலலிதா அடித்தார் என கதறினார்.... அவரைத் தடுக்க நவநீதகிருஷ்ணன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.
அப்போது இதே குலாம்நபி ஆசாத் எழுந்து, சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக ராஜ்யசபாவிலேயே குலாம்நபி ஆசாத்துக்கு சசிகலா புஷ்பா நன்றி தெரிவித்திருந்தார். பின்னர் ஊடகங்களிலும் கூட காங்கிரஸ் தமக்கு முழுமையாக ஆதரவு தருகிறது என்றார்.
இந்த நிலையில் அதே குலாம்நபி ஆசாத்துக்கு திடீரென அன்று அல்லாடிய நவநீதகிருஷ்ணனே அதே ராஜ்யசபாவில் நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்...












Click it and Unblock the Notifications