ஒரு ரயில் தடம் புரண்டதும்.. இன்னொரு ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? ஒடிசா விபத்தில் இதான் நடந்தது
புவனேஷ்வர்: ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டதும்.. இன்னொரு ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விபத்து: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.
ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? பொதுவாக ஒரு ரயில் தடம் புரண்டதும்.. அந்த பாதையில் செல்லும் ரயில்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஏனென்றால் பொதுவாக தடம் புரளும் ரயில்கள் அருகில் இருக்கும் தண்டவாளங்களில்தான் விழும். அதனால் பொதுவாக அருகில் இருக்கும் தண்டவாளத்தில் சேவைகள் நிறுத்தப்படும்.
ஆனால் இந்த முறை அப்படி ரயில்கள் நிறுத்தப்படவில்லை. காரணம் முதலில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டதே யாருக்கும் தெரியாது. காரணம்.. அந்த விபத்து காட்டு பகுதியில் நடந்துள்ளது. இதனால் ரயில்வே அதிகாரிகளுக்கே விபத்து பற்றி தெரியவில்லை.
இன்னொரு பக்கம் அந்த காட்டு பகுதியில் சிக்னல் எதுவும் இல்லை. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமும் ரயில்வே அதிகாரிகளுக்கு வேகமாக தகவல் கொடுக்க முடியவில்லை. இதனால் இன்னொரு பக்கம் அந்த வழியாக வரும் ரயில்களுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை.
இதனால்தான் பெங்களூரில் இருந்து வந்த ரயிலை தடுக்க முடியவில்லை. 3வதாக வந்த சரக்கு ரயிலையும் தடுக்க முடியவில்லை. இந்த சரக்கு ரயில் தடம் புரண்ட பின் அதில் இருந்த ஊழியர்கள்தான் புகார் கொடுத்துள்ளனர். இதனால்தான் முதலில் சரக்கு ரயில் தடம் புரண்டதாக செய்திகள் வந்தன.
அதன்பின்தான் மேலும் இரண்டு பயணிகள் ரயில் தடம் புரண்டதே தெரிய வந்துள்ளது. அது காட்டு பகுதி என்பதால் இந்த ரயில்கள் விபத்து குறித்த தொடக்க கால தகவல்களே முறையாக யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது காட்டுப்பகுதி என்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications