முன்கூட்டியே அறிந்து கொண்ட பாஜக.. கடைசியில் களம் வந்த மோடி.. டெல்லியில் நடந்தது என்ன?
Recommended Video
டெல்லி: ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பதை உணர்ந்துதான், ரொம்பவே தாமதமாக பிரதமர் மோடி டெல்லி தேர்தல் பிரச்சார களத்திற்கு வந்திருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
டெல்லி மக்கள், லோக்சபாவுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தல்களில் வேறு மாதிரியும் ஓட்டுப்போடுகிறார்கள். 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட இதே மக்கள், அடுத்த ஆண்டே ஆம் ஆத்மிக்கு அபார வெற்றியை பரிசாக கொடுத்தனர்.
இந்த நிலையில்தான், கடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றாலும், மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, சட்டசபை தேர்தல் வேறு களம் என்பது புரிந்தே இருந்தது.

அமித் ஷா
இந்த நிலையில்தான், பாஜகவின் தலைமை மாறியது. நட்டா தலைமையிடத்திற்கு வந்தார். அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கான பணிகள் அதிகம். இதற்கு நடுவே தேர்தலிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால், பிரதமர் மோடி, 8ம் தேதி சட்டசபை தேர்தல் என்றால், 3ம் தேதிதான் முதல் முறையாக பிரச்சார களம் வந்தார். வந்ததுமே, கெஜ்ரிவாலை மறைமுகமாக விளாசினாரே தவிர, பாஜகவின் மக்கள் நலப் பணிகளை அடுக்கி கூறவில்லை.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ்
பாஜகவை பொறுத்தளவில், டெல்லியின் பிரபல தலைவர்களாக விளங்கியவர்கள், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ். ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து இருவருமே, சில மாதங்கள் முன்பாக, நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். எனவே, இப்போது முழுக்க முழுக்க அமித் ஷா மற்றும் மோடியைத்தான் பாஜக தனது முகமாக நம்பியிருந்தது.

டெய்ல் என்டர்
எனவே, கிரிக்கெட்டின் துவக்க வீரர் போல களமிறங்க வேண்டிய நிலையில் இருந்தார் மோடி. ஆனால், பவுலர் போல கடைசியில் அவர் களமிறங்கியது ஏன் என்று பலரும் புருவம் உயர்த்தினர். இதற்கு முக்கிய காரணம், தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகும் பாஜக வெல்லவில்லை என்ற அவப்பெயர் வந்துவிட கூடாது என்று மோடி மிகவும் தற்காப்பு உத்தியை கையாண்டதுதான் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

தப்புக் கணக்கு
அதேநேரம் பாஜகவை சும்மா சொல்லக்கூடாது. கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில்தான் வென்றது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மிக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளது. அந்த வகையில், பாஜக தலைமை தப்புக் கணக்கு போட்டுவிட்டதோ? ஒருவேளை, மோடி முன்கூட்டியே பிரச்சார களம் வந்திருந்தால், இப்போது நிலைமை மாறியிருக்குமோ என்ற கேள்விகள் பாஜக தொண்டர்களிடம் எழுவதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications