ஒரே நாளில் மொத்தமாக மாறிடுச்சே.. தங்கம் விலை சரியுது. பங்குச்சந்தை பறக்குது! உண்மையில் என்ன காரணம்?
டெல்லி: நமது நாட்டில் கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை சரிந்து வந்தது. மறுபுறம் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஆனால், இன்று காட்சிகள் மொத்தமாக மாறியது. ஒரு பக்கம் பங்குச்சந்தை அதிகரித்த நிலையில், மறுபுறம் தங்கம் விலை சரிந்தது. திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு உண்மையில் என்ன காரணம்! இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த வாரம் பங்குச்சந்தை கொஞ்சம் சரிவைச் சந்தித்தது. அதேநேரம் தங்கம் விலையும் உயர்ந்தது. குறிப்பாகக் கடந்த மே 10ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,045 வரை போனது. இதனால் மக்கள் தங்கம் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அதேநேரம் இன்றைய தினம் நிலைமை மொத்தமாக மாறியது.

தங்கம் & பங்குச்சந்தையில் திடீர் மாற்றம்
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. மதியம் 2 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.36% உயர்ந்து 82,124 புள்ளிகளில் வர்த்தகமானது. மறுபுறம் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 3.46% உயர்ந்து 24,840க்கு வர்த்தகமானது. மறுபுறம் தங்கம் விலையும் கணிசமாகக் குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கிராமுக்கு இன்று ரூ.165 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,880க்கு விற்பனை விற்பனையானது.
இந்த இரண்டிற்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தானில் இறங்கி அடித்த இந்தியா அங்குள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தன. அதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்திய ராணுவத்தின் மகத்தான வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான்
இருப்பினும், இந்த வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை ஆரம்பித்தது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியது. முதல் சில நாட்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா வீழ்த்த மட்டுமே செய்தது. ஆனால், திருப்பி அடிக்கவில்லை. ஆனால், மூன்றாவது நாள் முதல் இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியது. இதில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவத் தளத்திலும் இந்தியா தாக்கியது.
என்ன காரணம்!
இதனால் வேறு வழியில்லாமல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தூதுவிட்டது. இந்தியாவும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் அதை ஒப்புக்கொண்டது. இரு நாடுகளுக்கும் நிலவிய மோதல் முடிவுக்கு வந்ததே ஷேர் மார்க்கெட் அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
இது தொடர்பாக மேத்தா ஈக்விட்டிஸ் லிமிடெட்டின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் டாப்சேவின் கூறுகையில், "மோதல் முடிவுக்கு வந்ததை முதலீட்டாளர்கள் பாசிட்டிவான ஒரு விஷயமாகவே பார்க்கிறார்கள். அதேநேரம் எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள். மோதல் முடிவுக்கு வரும் என்பது உறுதியாக தெரிந்ததால் பங்குச்சந்தை உயர்கிறது" என்றார்.
வரும் நாட்களில் என்ன நடக்கும்?
அதேநேரம் அடுத்த சில நாட்கள் முக்கியம்.. எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி நிலைமை மோசாக்கினால் பங்குச்சந்தை சரியும். தங்கம் விலை உயரவும் உயரலாம். ஆனால், பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியாவிடம் பயங்கரமாக அடி வாங்கிவிட்டது. அதேபோல அந்நாட்டின் பொருளாதாரமும் மோசமாக இருப்பதால் மீண்டும் மோதலை ஆரம்பிக்க வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் பங்குச்சந்தை உயரவும். தங்கம் விலை குறையவுமே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications