வாஜ்பாய்க்கு விஜய்காட்டில் நினைவிடம் அமைக்க தீர்மானித்தது ஏன்? மெரினா பாணியில் அங்கும் ஒரு சிக்கல்
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர், அடல் பிகாரி வாஜ்பாய், உடல் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் தகனம் செய்யப்பட்டு, விஜய் காட் பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மதிப்புமிக்க இந்த பகுதியில் நினைவிடம் அமைப்பதற்கு சட்டப்படி பிரச்சினை ஒன்று உள்ளது.
இந்த தடை இருக்கும்போதுதான் வாஜ்பாய்க்கு அங்கு நினைவிடம் அமைக்க தீர்மானித்துள்ளது மத்திய அரசு.
பெரிய தலைவர்
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து, முதல் முறையாக பிரதமராக பதவி வகித்தவர் வாஜ்பாய். எனவே அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உரிய மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று அக்கட்சியும், பிரதமர் மோடியும் விரும்புகிறார். இதன் காரணமாக விஜய் காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெரினா போன்ற முக்கியத்துவம்
விஜய்காட் என்ற பகுதி தமிழகத்தின் மெரினா போல, மறைந்த தலைவர்களுக்கான நினைவிடிம் உள்ள முக்கியமான இடமாகவும், கவுரவமிக்க இடமாகவும் மாறியுள்ளது. இதன் மிக அருகில் உள்ள ராஜ்காட் பகுதியில் தான் மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ளதும் இதற்கு காரணம். ராஜ்காட் மற்றும் விஜய்காட் ஆகிய பகுதிகள் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் உள்ளவை.
ராஜ்காட், விஜய்காட் எல்லாம் ஒன்றுதான்
எப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களும், அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் அருகருகே அமைந்து இருந்தாலும் கூட சிறு தூரத்தில் வித்தியாசத்துடன் தனித்துவமாக இருக்கிறதோ, அதேபோல ராஜ்காட் மற்றும் விஜய்காட் பகுதிகளும் ஒரே இடத்தில் அமைந்திருந்தாலும் சற்று தள்ளி இருக்கக்கூடிய பகுதிகள். ஆனால் நடந்தே செல்ல கூடிய பகுதிகள்.
முக்கியத்துவ பகுதி
8 முன்னாள் பிரதமர்கள் மற்றும், 2 முன்னாள் குடியரசு தலைவர்கள் மற்றும் இரு முன்னாள் துணை பிரதமர்கள் சமாதி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ளது. ஜவகர்லால் நேரு சமாதி, சாந்தி வனம் என்ற பெயரிலும், இந்திரா காந்தி சமாதி சக்தி ஸ்தலம் என்ற பெயரிலும், லால் பகதூர் சாஸ்திரி சமாதி, விஜய் காட் (வெற்றி பிளாட்பார்ம் என்ற பொருள்) என்ற பெயரிலும், சரண் சிங் சமாதி கிஷான் காட் என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் குடியரசு தலைவர்களான ஜெயின் சிங் மற்றும் சங்கர் தயாள் சர்மா, முன்னாள் துணை பிரதமர்கள் ஜெகஜீவன் ராம் மற்றும் தேவி லால் ஆகியோர் நினைவிடங்களும் இங்கே அமைந்துள்ளன.
சட்ட சிக்கல்
இதில் சிக்கல் ஏன் வருகிறது என்றால், 2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதுவரை நினைவிடங்கள் அமையப் பெறாத அனைத்து முன்னாள் பிரதமர்களுக்குமாக ஒரே நினைவிடமாக, ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் மட்டுமே போதும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இடப் பற்றாக்குறை இதற்கான காரணமாக கூறப்பட்டது. ஆனால், இப்போதைய, மத்திய அரசோ விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ளது. ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலமும் ராஜ்காட் மற்றும் விஜய்காட்டுக்கு நடுவேதான் உள்ளது. இங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தலைவர்கள் உடல் தகனம் செய்யப்பட அனுமதி உண்டு. ஆனால், அப்பகுதியில் நினைவிடம் அமைக்கதான் சட்டம் தடை செய்கிறது. இதற்கு தடையாக சட்டம் இருந்தபோதிலும், அதை யாரும் சொல்லி தடை கேட்கவில்லை. எனவே, வாஜ்பாய் தகனம் முடிந்த பிறகு நடைபெறும் முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அந்த சட்டத்தை நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.