குடிபோதை தகராறு - ஆந்திராவில் கணவனை கொன்ற மனைவி - நாசிக்கில் அம்மாவைக் கொன்ற குடிகாரன்
குடிக்க பணம் தர மறுத்த அம்மாவை அடித்து கொலை செய்துள்ளான் ஒரு குடிகாரன். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவில் குடிபோதையில் அடித்த கணவனை கோடாரியால் வெட்டி கொன்றுள
நாசிக்: குடித்து விட்டு அடித்த கணவனை கோடாரியால் ஒரே போடாக போட்டு கொன்றுள்ளார் ஒரு பெண் ஆந்திராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடி ஒரு மனிதனை என்னவேண்டுமானாலும் செய்யத்தூண்டுகிறது. குடிக்க பணம் கிடைக்கும் வரைக்கும் பிரச்சினையில்லை. குடிக்க பணம் இல்லாவிட்டால் போதும் நகை பணத்தை திருடத்தூண்டும், திருட எதுவும் கிடைக்காவிட்டால் பணம் தராதவர்கள் மீது கோபம் திரும்பும். குடிக்க பணம் தேவை என்றால் கொலை கூட செய்யத் தயங்காதவர்களாக இருக்கின்றனர். நாசிக்கில் குடிக்க பணம் தர மறுத்த அம்மாவை அடித்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான் ஒரு குடிகாரன்.

கொலை செய்யப்பட்ட 78 வயதான அந்த மூதாட்டி நாசிக்கில் வசித்து வந்தார். அவரது மகன் கமலாகர் காலே. 57 வயதாகும் அவர் குடிக்காக பணத்தை செலவு செய்து வந்தார். நாசிக் மாவட்டம் சாத்பூரின் ராஜ்வாடா பகுதியில் வசித்து வந்த கமலாகர் பல ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர் வேலை செய்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான அவர் கடந்த பல ஆண்டுகாலமாகவே வேலை செய்யாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்தார். குடிக்க பணம் தேவைப்படும் போதெல்லாமல் அம்மாவிடம் சண்டை போட்டு பணம் வாங்கிக் கொண்டு போவாராம்.
செவ்வாய்கிழமையன்று அதிகமாக பணம் கேட்டு அம்மாவை தொந்தரவு செய்தார். அதற்கு அந்த மூதாட்டி மறுக்கவே ஆத்திரமடைந்த கமலாகர் தனது அம்மாவை கீழே தள்ளி விட்டார். இதில் ரத்தகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். கமலாகர் காலேவை கைது செய்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
ஆந்திராவில் தன்னை அடித்து கொடுமைப்படுத்திய கணவனை கோடாரியால் வெட்டி கொன்றுள்ளார். மனைவியால் வெட்டி கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பொஞ்சிபாபு என்பதாகும். ஆந்திரா மாநிலம் சிரிசில்லா கிராமத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி பல்லம்மா. பொஞ்சிபாபு மொடாக்குடியன். குடித்துவிட்டு வந்து தினசரியும் மனைவியை அடிப்பானாம். வழக்கம் போல நேற்றும் மனைவியை அடித்து உதைத்துள்ளான். வலி தாங்க முடியாத பல்லம்மா பக்கத்தில் கிடந்த கோடாரியை எடுத்து ஒரே போடாக போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பொஞ்சிபாபுவை இரவு 11 மணிக்கு வந்து ஆம்புலன்ஸ்சில் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பொஞ்சிபாபு உயிரிழந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீசிற்கு தகவல் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், பல்லம்மாவிடம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் ஒரு பெண் அடித்து கொடுமைப்படுத்திய கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்தார். இரண்டு மகன்கள், 3 மகள்கள் பிறந்த பின்னரும் அடித்து உதைத்து மனைவியை கொடுமைப்படுத்தினார் முதிராம். கணவனின் கொடுமை தாங்காத குணேஷ்வரி என்ற அந்த பெண் கணவனின் அடியை தாங்க முடியாமல் கோடாரியால் ஒரே வெட்டாக வெட்டி தலையை துண்டாக எடுத்துக்கொண்டு போய் போலீசில் சரணடைந்தார். குடித்து விட்டு அடித்த கணவனை சகித்துக்கொண்டு வாழும் காலமெல்லாம் மலையேறி விட்டது என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் இந்த பெண்கள்.












Click it and Unblock the Notifications