தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு தனித்து போட்டி? வியூகம் வகுக்கும் பாஜக
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளை கழற்றிவிட்டு தனித்து போட்டியிட பாஜக திட்டமிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், பல மாநிலங்களிலும் அக்கட்சி முன்பைவிட பலப்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் முதன்முறையாக அக்கட்சி ஆட்சியை தனித்து பிடித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தலின்போது மிகப்பெரும்பான்மை வெற்றியை பாஜக ஈட்டியது. தென் மாநிலங்களை பொறுத்தளவில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் பாஜக வலுவாக உள்ளது. கேரளா, தமிழகத்தில் மட்டுமே அக்கட்சி பலவீனமாக உள்ளது. இவ்விரு மாநிலங்களிலும்கூட, சில குறிப்பிட்ட மண்டலங்களில் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப்
காங்கிரஸ் அதல பாதாளத்தில் இருப்பதால், பாஜகவின் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறார் பாஜக தலைவர் அமித்ஷா. ஏற்கனவே மகாராஷ்டிராவில் 25 வருடமாக சிவசேனாவுடன் இருந்த கூட்டணியை உடைத்துள்ள பாஜக, பஞ்சாப்பில் நெடுங்காலமாக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளத்துடனான கூட்டணியையும் உதறிவிட்டு தனியாக போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளால் குழப்பம்தான்
இதேபோல தமிழகத்திலும், பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட வாய்ப்புள்ளதா என பாஜக தலைமை யோசித்து வருகிறது. ஏனெனில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது தலைமையில்தான் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைய வேண்டும் என்று கருதி செயலாற்றி வருகின்றன. மேலும், லோக்சபா தேர்தலில் இக்கட்சிகளுடன் கூட்டணி வைத்து, பெரும் தலைவலியை பெற்றது பாஜக. கூட்டணி குழப்பம் முதல் பிரச்சாரம் வரை தொடர்ந்து பிரச்சினை மேல் பிரச்சினைதான்.

பாஜக வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்
இருந்தாலும், தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பாஜக தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினமான காரியமாகிவிடும். எனவே, இரண்டாண்டு இடைவெளியில் கட்சியை மேலும் வளர்த்தெடுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு உள்ள ஆதரவை மேலும் அதிகரிக்க செயல் திட்டங்களை தீட்டுமாறு மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுக்குழு கூட்டம்
தமிழக பாஜக தலைவராக, தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்ற பின், அக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம், வரும், 12ல், சென்னையில் நடக்கிறது. சொத்து குவிப்பு வழக்கு, 2ஜி வழக்கு போன்றவற்றால், பெரிய திராவிடக் கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் நிலையில், பா.ஜ.,வுக்கான தேர்தல் வியூகம் இந்த கூட்டத்தில் வகுக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications