அடுத்து சி.ஏ.ஏ.தான்... கொரோனா ஓயும் வரை காத்திருக்கிறோம் - அமித்ஷா திட்டவட்டம்
கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக குறைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்ற நிலையில் தற்போது 77 தொகுதிகளை வென்று இருக்கிறது.
2 மேட்டர்கள்.. அமித்ஷா பேனரை கவனிச்சீங்களா.. வந்தாச்சு பிரச்சனை.. ஹைகோர்ட் போட்ட போடு.. கப்சிப் பாஜக
அராஜக ஆட்சி
மேற்கு வங்கத்தில் 2 கோடியே 28 லட்சம் பேர் எங்களுக்கு வாக்களித்து ஒவ்வொரு கிராமத்திலும் பாஜகவை வலுப்படுத்தி இருக்கிறீர்கள். மேற்கு வங்கத்தின் மக்கள் 3 முறை மம்தா பானர்ஜியை முதலமைச்சராக்கி இருக்கின்றனர். அவர் அம்மாநிலத்தை முன்னேற்றி இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவரது ஆட்சியில் அராஜகங்களும் ஊழல்களும் பேரழிவுகளும் நிறுத்தப்படவில்லை.
பாஜகவினர் மீது தாக்குதல்
பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கு வங்கத்தில் குறையவே இல்லை. அராஜகமான ஊழல்களும் பேரழிவுகளும் நிறைந்த இந்த ஆட்சியை மேற்கு வங்க மக்கள் தூக்கி எரியும் வரை பாஜக தொடர்ந்து போராடும். தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் ஏராளமான வன்முறைகள் வெடித்தன. மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, ஆளும் கட்சியின் ஆட்சி நடக்கிறது என மனித உரிமை ஆணையம் தெரிவிக்கிறது.
தலைவிரித்து ஆடும் வன்முறை
இந்த வன்முறைகளில் 101 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 1,829 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இதில் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீது 168 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏதேனும் அம்பாவீதங்கள் நிகழ்ந்தால் திரிணாமூல் காங்கிரஸ் குழுவை மம்தா பானர்ஜி அங்கு அனுப்பி வைப்பார்.
அதிக மின் கட்டணம்
ஆனால், பிர்பாமில் 8 பெண்களும் ஒரு குழந்தையும் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட பிறகும் ஏன் திரிணாமூல் காங்கிரஸ் குழு அங்கு செல்லவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில்தான் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் மாநிலங்களின் பட்டியலிலும் மேற்கு வங்கம் வருகிறது.
சி.ஏ.ஏ. நிச்சயம் வரும்
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவதூறுகளை பரப்பி வருகிறது. சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். நான் இப்போது சொல்கிறேன். கொரோனா அலைகள் ஓய்ந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி வெளிநாட்டினர் ஊடுருவலை விரும்புகிறார். மேற்கு வங்கத்துக்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது. திறந்த காதுகளுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இதை கேளுங்கள். சிஏஏ என்பது உண்மை. அது விரைவில் மெய்பிக்கப்படும்." என்றார்.