பொங்கலுன்னா ஜல்லிக்கட்டு, பூரம்னா யானை அணிவகுப்பு.. சீசனுக்கு கிளம்பும் விலங்கு ஆர்வலர்கள்!
திருவனந்தபுரம்: வன விலங்கு ஆர்வல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு காரணமாக, பாரம்பரிய திருச்சூர் பூரம், யானைகள் அணி வகுப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்து பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை போல, கேரள பாரம்பரிய யானைகள் அணிவகுப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர், கேரள சேட்டன்கள்.
கேரளாவின் திருச்சூரில் பூரம் விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். வெளிநாடு, உள்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், இந்த நிகழ்வை பார்க்க திருச்சூரில் கூடுவார்கள். அப்போது, அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணி வகுப்பு பிரமிப்பூட்டும். இவ்வாண்டு பூரம், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்தவ வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வர உள்ளது. தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுலா சி.பந்த் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்க உள்ளது. இது ஒரு பிரச்சினை என்றால், கேரள அரசு இதுவரை இந்திய விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறவில்லையாம்.

யானைகள் பயப்படுமா இல்லையா..
இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ள அமைப்பின் தலைவர் சுபர்னா பி கங்குலி கூறுகையில், வன விலங்குகளை பாதுகாக்க நாங்கள் அளித்த பரிந்துரைகள் செவிடன் காதில் ஊதிய சங்காய் மாறிப்போனது. எனவேதான் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்தோம். இந்த வழக்கு, பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும். ஒரு மாநிலத்தில் இதுபோன்ற நடவவடிக்கை எடுக்கப்பட்டால்தான், பிற மாநிலங்களிலும் அந்த நடவடிக்கைகள் பரவும். பொது இடத்தில் யானைகளை நிறுத்தி வைத்து, மேளம் கொட்டுவது, பட்டாசு வெடிப்பது என்று அதற்கு தொந்தரவு தரப்படுகிறது. சில நேரங்களில் யானைகள் கோபமடைந்து பாகன்களை கொல்வதால், அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்றார்.

யானைக்கு என்னே உபசரிப்பு..
ஆனால், பேராசிரியர் மாதவன் குட்டி வேறு மாதிரியான தகவல்களை தருகிறார். அவர் கூறுகையில், 20 நிமிடத்துக்கும் மேலாக யானைகள் நிற்க வேண்டிவந்தால், அவற்றுக்கு நிழல் தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஈரமுள்ள துணிகளை, யானைகளின் காலடியில் விரித்து, அவற்றின் உடல் சூடு தணிக்கப்படுகிறது. வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவையும் யானைகளுக்கு தரப்படுகிறது என்கிறார்.

கிளம்பிட்டாய்ங்கய்யா..
எது எப்படியோ, தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், மலையாள சேட்டன்கள். இந்த வன விலங்கு ஆர்வலர்கள்தான் எங்கதான் இருப்பாங்களோ தெரியலை, பொங்கலுன்னா ஜல்லிக்கட்டு, பூரம்னா யானை, அணிவகுப்பு பிரச்சினைகளை தூக்கிக் கொண்டு கரெக்டா சீசன் பார்த்து களமிறங்கிடுறாங்க.












Click it and Unblock the Notifications