ஜெ. விடுதலைக்கு 'ஸ்டே..' அரசு வக்கீல் ஆச்சாரியா பரபரப்பு பேட்டி! அப்போ முதல்வர் பதவி?
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவே தொடர உள்ளார். மேல்முறையீட்டின்போது, ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை (ஸ்டே) கேட்கப்படும் என்று பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.
பெங்களூரில் இதுகுறித்து பி.வி.ஆச்சாரியா அளித்துள்ள பேட்டி: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 மதிப்புக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், இது வருவாயைவிட 10 சதவீதத்துக்குள்ளாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவறுகள் அதிகம்
ஆனால், நீதிபதியின் கணித தவறை திருத்தினால், சுமார் 76 சதவீதம் அளவுக்கு வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக தீர்ப்பிலேயே உள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏகப்பட்ட தவறுகள் அந்த தீர்ப்பில் உள்ளன.

பழைய வரலாறு
919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800க்கும் மேற்பட்ட பக்கங்களில், பழைய காலத்து விவரங்கள்தான் உள்ளன. எஞ்சிய 119 பக்க தீர்ப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எனவேதான், தீர்ப்பை சரி செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக சட்டத்துறை முதன்மை செயலாளர் மற்றும் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தடை கேட்கப்படும்
எனது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்தது. முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு முதலில் தடை கேட்கப்படும். ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை பெற்று, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவேன். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

முதல்வர் பதவி
கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புபடி, ஜெயலலிதா குற்றவாளியாகிவிடுவார். எனவே ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க வேண்டிவரும். சிறைவாசத்தில் இருந்து தப்ப உடனடியாக ஜாமீன் கேட்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications