கர்நாடக பரபரப்பு: அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அம்பரீஷை இழுக்க பாஜக திட்டம்.. தடுக்க காங். முயற்சி!
பெங்களூர்: கர்நாடக அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவி இழந்த நடிகர் அம்பரீஷ் முன்னாள் மத்திய அமைச்சர் சீனிவாச பிரசாத் ஆகிய முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக மற்றும் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்பரீஷ் சீனிவாச பிரசாத் உள்ளிட்ட 14 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிட்டு, 13 பேருக்கு புதிதாக அமைச்சரவையில் வாய்ப்பளித்தார்.
இதனால் அதிருப்தியடைந்த அம்பரீஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து துணை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார். ஆனால் இன்னமும் அது ஏற்கப்படவில்லை. இந்நிலையில், சீனிவாச பிரசாத்தும், தனது அதிருப்தியை ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டியளிப்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
நள்ளிரவு பேச்சு
இந்நிலையில் அம்பரீஷையும், சீனிவாச பிரசாத்தையும் தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக, ம.ஜ.த முயன்று வருகின்றன. இரவோடு இரவாக பேச்சுவார்த்தைகள் அரங்கேறியுள்ளன.
ஒக்கலிகர் வாக்கு தேவை
பாஜக லிங்காயத்து ஜாதி பிரிவினர் வாக்குகளையை பெரிதும் நம்பியுள்ளது. இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட ஒக்கலிகர் ஜாதி வாக்குகள் தேவகவுடா கட்சிக்கோ அல்லது காங்கிரசுக்கோ செல்கிறது. இதற்கு காரணம், தேவகவுடாவும், காங்கிரசின் அம்பரீஷ், டி.கே.சிவகுமார் போன்றோர், ஒக்கலிகர் ஜாதியில் பிரபலமானவர்கள் என்பதுதான்.
எடியூரப்பா முயற்சி
எனவே, ஒக்கலிகர் வாக்குகளை ஈர்க்க, இப்போதுள்ள சூழலை பயன்படுத்தி, அந்த ஜாதியை சேர்ந்த முக்கிய புள்ளியான அம்பரீஷை இழுத்துவிட பாஜக முயலுகிறது. அம்பரீஷுக்கு ஆறுதல் கூறியுள்ள எடியூரப்பா விரைவில் அம்பரீஷை சந்தித்து பேச உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தடுக்க முயற்சி
காங்கிரசை உடைக்க பாஜகவும், மஜதவும் முயலுவதால் சித்தராமையா அரசு அதிர்ச்சியிலுள்ளது. வெளியேற்றப்பட்ட 14 அமைச்சர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது.