50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்... கேரளாவில்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 50 வயதுடைய பெண் ஒருவருக்கு நவீன சிகிச்சைகள் மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.
கேரள மாநிலம் மூவட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த சசிதரன் (58), இவரது மனைவி சுஜாதா (50). கடந்த 1987ம் ஆண்டு திருமணமான இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

இது தொடர்பாக இருவரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பிறப்பு சிகிச்சை மைய டாக்டர் சபின் சிவதாஸ் என்பவரை இத்தம்பதியினர் சந்தித்தனர்.
அவர், சசிதரன்-சுஜாதா தம்பதியருக்கு குழந்தை பிறப்புக்கான நவீன சிகிச்சைகள் அளித்தார். இதில் சுஜாதா கர்ப்பமானார். அவரது 28-வது திருமண நாளான பிப்ரவரி 1ம் தேதி அவருக்கு பிரசவம் நடந்தது.
இதில், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என சுஜாதாவிற்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன. தாயும், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர். தற்போது குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. பிரசவம் முடிந்ததும், 3 குழந்தைகளையும் அருகே படுக்க வைத்து அவற்றின் முகங்களை உற்றுப்பார்த்து சுஜாதா மகிழ்ச்சி அடைந்தார்.
50 வயதுக்கு பிறகு தனக்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக சுஜாதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications